வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 செப்டம்பர் 2020 (11:51 IST)

கடைசியா காதுல பூ வெச்சிட்டிங்களே! – அரியர் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அளித்தது குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அரியர் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கல்லூரி தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் இறுதியாண்டு மாணவர்களை தவிர மற்ற செமஸ்டர் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த கலை, அறிவியல் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு எதிராக அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். தவிரவும் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தொழில்நுட்ப கல்வி அமைப்பு கடிதம் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரியர் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நூதனமாக காதில் பூ வைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள் ஏஐடிசிஇ கடிதம் குறித்து நடவடிக்கை தேவை என்றும், மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறித்த தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.