1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (11:27 IST)

பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா? புஸ்ஸி ஆனந்த் விளக்கம்

vijay makkal iyakkam
அண்ணாமலையின் பாத யாத்திரையில் பங்கேற்று, பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த நபர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விஜய் மக்கள் இயக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின்  ‘’என் மண் என் மக்கள்’’ என்ற பாதயாத்திரை சமீபத்த நடந்து வருகிறது. ராமேஸ்வரத்தில் தொடங்கிய பயணம், சிவகங்கை,புதுக்கோட்டை மாவட்டங்களை தொடர்ந்து மதுரையில் நடைபெற்று வருகிறது.

நேற்று  அண்ணாமலை மதுரையில் உள்ள பகுதியில் தொண்டர்களை சந்தித்து வரும் நிலையில், இந்தப்  பாத யாத்திரையின்போது  விஜய் மக்கள் இயக்கத்தினர் சிலர் கலந்து கொண்டனர்.  அப்போது அவர்கள், ‘’தளபதி வாழ்க’’ என்று கோஷம் எழுப்பினர்.

அப்போது செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தெற்கு மாவட்டம் கொள்கை பரப்பு தலைவர் ஜிகே பத்ரி,’’ஊழலற்ற நல்லாட்சியை எதிர்பார்க்கிறோம். ஊழல் செய்யக் கூடாதுன்னு எங்க அண்ணனும் சொல்லறாரு..இந்த அண்ணனும் சொல்லறாரு… தளபதி மூத்தவரு. இவரு இளையவரு…  நல்லதுக்கு ஆதரவு தெரிவிக்கிறதுதான் நல்ல மனுஷனுக்கு அடையாளம். அதனால், நாங்கள் இந்த கட்சிக்கு (பாஜக)க்கு ஆதரவு தெரிவிக்க வந்துள்ளோம்’’ என்று கூறியிருந்தார்.

இவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்தால் எப்படி விஜய்யின் அனுமதியின்றி இக்கூட்டத்தில் பங்கேற்க முடியும் என கேள்வி எழுந்தது.
vijay

இந்த நிலையில், பாஜக கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விஜய் மக்கள் இயக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’தளபதி விஜய் மக்கள் இயக்கக் கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின்  எந்த பொறுப்பிலும் இல்லை, மற்றும்  அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.