1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 9 ஜனவரி 2024 (11:28 IST)

பெண் காவல் அதிகாரிக்கு பாலியல் தொல்லை.! முன்னாள் சிறப்பு டிஜிபி மனு தள்ளுபடி.! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!!

highcourt
பெண் காவல் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
தமிழ்நாட்டில் சிறப்பு டிஜிபி பதவியில் இருந்தவர் ராஜேஷ் தாஸ். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்த போது சிறப்பு டிஜிபியாக இருந்தவர்.
எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் செல்லும் போது பெண் எஸ்பி அதிகாரி ஒருவரைத் தனது காரில் அழைத்துச் செல்லும் போது அந்த பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது.

ராஜேஷ் தாசுக்கு உதவியதாக செங்கல்பட்டு எஸ்பியாக இருந்த கண்ணன் மீதும் புகார் எழுந்தது. இதையடுத்து அந்த பெண் காவல் அதிகாரி தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்த சம்பவம் தமிழகத்தில் பெரும் ஏற்படுத்தி இருந்தது.
 
இதை தொடர்ந்து சிறப்பு டிஜிபி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், அவருக்காகப் புகார் கொடுக்க சென்ற பெண் அதிகாரியை மிரட்டிய செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இருவரும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர். 
 
rajesh das
இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த ஜூன் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. பாலியல் தொல்லை வழக்கில் ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு 3 ஆண்டுகள் சிறையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
 
இந்த தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில், நாளை ஜனவரி 6ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்திருந்தது. 
 
இதற்கிடையே இந்த மேல்முறையீட்டு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி ராஜேஸ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த மனு மீதான விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் முகாந்திரம் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளித்தார்.