1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By SInoj
Last Modified: செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (20:43 IST)

தமிழகத்தில் நடந்த ஆட்சிகளின் அவல நிலைக்குச் சான்று-இது-அண்ணாமலை

Annamalai
மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல் இருப்பது என்ன மாதிரியான மாடல் என்பதை, முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்’’என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குழிப்பட்டி மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லை என கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், மலைவாழ் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்படவே அவரைத் தொட்டிலில் கட்டி மக்கள் தூக்கிச் சென்றுள்ளனர். 
 
அதனை வீடியோவாக பதிவிட்ட மலைவாழ் மக்கள் ,சாலை வசதி செய்து தராததால் மக்களவை தேர்தலையொட்டி  எந்தக் கட்சியினரும் ஓட்டுக் கேட்டு மலைவாழ் கிராமத்திற்கு வர வேண்டாம் என மக்கள் தெரிவித்தனர்.
 
இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை,
 
’’திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள மலைவாழ் கிராமம் ஒன்றில், சாலை வசதி இல்லாததால், கர்ப்பிணிப் பெண் ஒருவரை, துணியால் டோலி கட்டி, மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லும் காணொளி ஒன்றை, சமூக வலைத்தளத்தில் காண நேர்ந்தது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. 
 
கடந்த 2000 ஆம் ஆண்டு, அன்றைய பாரதப் பிரதமர் அமரர் வாஜ்பாய் அவர்கள் கொண்டு வந்த கிராம சாலைகள் திட்டம் மூலம், பல ஆயிரம் கோடி நிதி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டும், திருப்பூர், வேலூர் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு இன்னும் கூட சாலை வசதிகள் கிடைக்காமல் இருப்பதே, இத்தனை ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடந்த ஆட்சிகளின் அவல நிலைக்குச் சான்று. 
 
மத்திய அரசின் திட்டங்களுக்குப் பெயரை மாற்றுவதில் மட்டும் முனைப்புடன் இருக்கும் தமிழக முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள், அந்தத் திட்டங்களை ஒரு நாள் விளம்பரத்துக்காக, வெறும் அறிவிப்போடு மட்டும் நிறுத்திக் கொள்கிறாரே தவிர, அவற்றை நிறைவேற்றுவதில்லை. 
 
மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல் இருப்பது என்ன மாதிரியான மாடல் என்பதை, முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்’’என்று கேட்டுக் கொண்டுள்ளார்.