1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 23 மே 2021 (14:41 IST)

கடந்த அரசு செய்த அதே தவறு தொடர்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம்

கடந்த ஆட்சியில் நடந்த அதே தவறுகள் தற்போதும் தொடர்வதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார் 
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடையும் நிலையில் நேற்றே ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்டது. இதனால் நேற்றும் இன்றும் அனைத்து கடைகளும் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் கூட்டமாக தெருக்களிலும் சாலைகளிலும் நடமாடி வருகின்றனர். இதனால் கொரோனாவுக்கு கொண்டாட்டமாக உள்ளது என்று கூறப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சரியான திட்டமிடல் இல்லை என்றும் மக்களை குழப்பி வருவதாகவும் கடந்த ஆட்சியாளர்கள் செய்த அதே தவறை தற்போதைய அரசும் செய்து வருகிறது என்றும் இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை என்றும் டிடிவி தினகரன் குறிப்பிடுகிறார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
 
தமிழகம் முழுவதும் கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது கொரோனா பாதிப்பு இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சமும்  கவலையும் ஏற்படுகிறது.  நோயின் பாதிப்பு அதிகமாகிறது என்று சொல்லிவிட்டு,  எல்லாக் கடைகளையும் ஒன்றரை நாள் முழுமையாக திறக்க எப்படி அனுமதித்தார்கள்?
 
சிறப்பு பேருந்துகளை இயக்கும் அவசர முடிவை எடுத்தது ஏன்? நகரங்களில் இருக்கும் அதிக பெருந்தொற்று  பாதிப்பு எல்லா ஊர்களுக்கும் பரவி விடாதா? ஏற்கனவே காலை 10 மணி வரை கடைகள் திறந்து இருந்த நிலையில், அதன் பிறகு அவசியமின்றி வெளியில் வந்தவர்களை   முழுமையாக கட்டுப்படுத்தாமல் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளில் சரியான  திட்டமிடுதல் இன்றி   இப்படி குழப்புவது ஏன்?  கடந்த ஆட்சியாளர்கள் செய்த அதே தவறுகளை தற்போதைய தமிழக அரசும் செய்வது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை
 
இதன் பிறகாவது ஆட்சியாளர்கள் பொறுப்போடு நடந்து கொள்வார்களா? மக்களும் மிகுந்த கவனத்தோடு நடந்துகொண்டு தாங்களும் பாதிக்கப்படாமல், மற்றவர்களும் பாதிப்படைவதற்கு  காரணமாகிவிடாமல் இருந்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்