ஒரு வருஷத்துக்கு முன்பே பிரிந்துவிட்டோம்: விவாகரத்து மனுவில் அமலா பால் தகவல்
ஓர் ஆண்டுக்கு முன்பே நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று நடிகை அமலா பால் தனது விவாகரத்து மனுவில் தெரிவித்துள்ளார்.
டைரக்டர் விஜய்க்கும், நடிகை அமலாபாலுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் காதல் மலர்ந்தது. இருவரும் 2014ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.
கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் விருப்பத்தை மீறி, அமலாபால் படங்களில் நடிப்பது. விஜய், அமலாபால் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்திதாகவும், இதனால் இருவரும் விவாகரத்து செய்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், திருமணத்திற்கு பிறகு அமலாபால் நடிப்பதில் எந்த் பிரச்சனையும் இல்லை. ஆனால், திருமண வாழ்வுக்கு முக்கியமான நம்பிக்கை, நேர்மை ஆகிய இரண்டும் உடைந்துவிட்டதால் அமலாபாலை விவாகரத்து செய்வதாக விஜய் சமீபத்தில் விளக்கமளித்தார்.
இந்நிலையில், விஜய், அமலாபால் ஆகிய இருவரும் சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்கள். அமலா பால் தாக்கல் செய்த விவாகரத்து மனுவில், எங்கள் இருவருக்கும் 2014 ஜூன் 10-ந்தேதி திருமணம் நடந்தது. ஒரு ஆண்டுக்குள்ளேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2015 மார்ச் 3-ந்தேதி முதல் பிரிந்து தனித் தனியாகத்தான் வாழ்கிறோம். எங்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் சுமூக தீர்வு ஏற்படவில்லை. எனவே இனி சேர்ந்து வாழ வழியில்லை. எனவே பரஸ்பரம் விவாகரத்து கேட்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இதனை ஏற்று கொண்ட நீதிபதி, வழக்கை 6 மாதத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.