1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Aadhar EB number link have some technical confussions

யாருடைய ஆதார் யாருடைய மின் இணைப்பில்..? – ஆதார் – மின் இணைப்பில் கடும் குளறுபடி!

tneb
தமிழ்நாடு மின்சார வாரிய பயனாளர்கள் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வரும் நிலையில் பல இடங்களில் இந்த இணைப்புகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்தது. ஆரம்பத்தில் மெதுவாக இணைக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில் மின்சாரவாரியம் மின் இணைப்பு – ஆதார் இணைப்பு முறையை எளிமையாக்கியது.

பல இளைஞர்கள் வீட்டிலிருந்தபடியே மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைத்தனர். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 2,811 மின்சார வாரியங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு மின் இணைப்பு எண் – ஆதார் எண் இணைக்கும் பணிகள் முழுவீச்சில் செய்யப்பட்டன.


இதுவரை மொத்தம் 2.59 கோடி மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் மீத இணைப்புகளையும் முடிக்க பிப்ரவரி 15ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் முன்னதாக இணைக்கப்பட்ட ஆதார் எண்களில் நிறைய குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இணைப்பு பணிகளை முடிப்பதற்காக பல்வேறு ஆதார் எண்கள் சம்பந்தமற்ற மின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுபற்றி மின்பகிர்மான பிரிவு தலைமை பொறியாளர்களுக்கு மின்வாரிய இயக்குனர் அனுப்பியுள்ள உத்தரவில், இதுபோன்ற தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளது திட்டத்தின் நோக்கத்தையே தோற்கடிப்பதாக உள்ளதாகவும், ஆதார் இணைப்பு இறுதி செய்வதற்கு முன்பு அதிகாரிகள் கவனமாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K
அடுத்த கட்டுரையில்
துருக்கி - சிரியா எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ; பலி எண்ணிக்கை 521 ஆக உயர்வு