வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 26 மே 2023 (20:49 IST)

திமுகவினர் மீது வருமான வரித்துறை பெண் அதிகாரி காவல்நிலையத்தில் புகார்

karur
தங்களை பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும், தாக்க முற்பட்டதாகவும், திமுகவினர் மீது வருமான வரித்துறை பெண் அதிகாரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் சோதனைக்கு முயன்ற போது தாக்கப்பட்டதாக கூறப்பட்ட வருமானவரித்துறை பெண் அதிகாரி மற்றும் கரூர் மாவட்டத்தில் சோதனைக்கு வந்திருந்த வருமான வரித்துறை அதிகாரிகள் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனத்தை சந்தித்து புகார் மனு அளித்தனர். 
 
தங்களை பணிகள் செய்ய விடாமலும் தங்களை தாக்க முற்பட்டதாகவும் திமுகவினர் உள்ளிட்டோர் மீது புகார் அளித்தனர்.
 
இது குறித்து பதில் அளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர்வதனம் தங்களுக்கு முன்கூட்டியே சோதனை நடத்துவது தொடர்பாக  தகவல் தெரிவித்திருந்தால் உரிய பாதுகாப்பு வழங்கி இருப்போம் என தெரிவித்ததாக காவல்துறையினர் வட்டாரங்கள் தெரிவித்தன.
 
கரூர் மாவட்டம் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சரின் தம்பி அசோக் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரி பெண் ஒருவர் சோதனை நடத்த முயன்ற  போது அவரிடம் அங்கு குழுமியிருந்த திமுகவினர் அடையாள அட்டை காண்பிக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
 
அப்போது பெண் அதிகாரிக்கும் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு   ஏற்பட்டது. இதில் திமுக தொண்டர் குமார் என்பவரை பெண் அதிகாரி தாக்கியதாக கூறப்படுகிறது. அப்பொழுது குமாருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அங்கிருந்த திமுக தொண்டர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
இதனிடையே திமுக தொண்டர் குமாரை தாக்கியதாக பெண் அதிகாரியை கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவினர் பெண் அதிகாரி வந்த காரை முற்றுகையிட்டனர். 
 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கரூர் நகர காவல் நிலையத்தினர் சம்பவத்திற்கு வந்து பெண் அதிகாரியை மீட்டு அவர்  மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி பெண் அதிகாரியை கரூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
 
இந்த சம்பவம் கரூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.