1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2019 (12:02 IST)

டி.என்.சேஷனுக்கு அண்ணா அறிவாலயத்தில் சிலை ஏன்? காங்கிரஸ் பிரமுகரின் திடுக்கிடும் தகவல்

திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு டி.என்.சேஷன் நிறைய உதவிகள் செய்துள்ளதால் அவருக்கு அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்க வேண்டும் என்று சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
நேற்றிரவு மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உடலுக்கு இன்று காலைஅஞ்சலி செலுத்திய கராத்தே தியாகராஜன் அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, '“1996ம் வருடம் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த ஜிகே மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கிய சில நாட்களில் அவருக்கு கட்சிக்கான அங்கீகாரமும், சைக்கிள் சின்னமும் கிடைத்தது. இதற்கு காரணம் அன்றைய தேர்தல் கமிஷனராக இருந்த டி.என்.சேஷன் தான். தமாக கூட்டணியால் தான் அன்று திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது
 
அதேபோல் திமுகவில் இருந்து பிரிந்து மதிமுக என்ற கட்சியை தொடங்கிய வைகோ, உதயசூரியன் சின்னத்தை தனக்கு கேட்டதால் திமுகவின் சின்னம் முடக்கப்பட்டது. அந்த நேரத்திலும் திமுகவின் சின்னத்தை காப்பாற்றி உதவி செய்தவர் டி.என். சேஷன் அவர்கள் தான். எனவே இந்த நன்றிக் கடனுக்காக அண்ணா அறிவாலயத்தில் டி.என்.சேஷனுக்கு திமுக சிலை வைக்க வேண்டும் என்று கராத்தே தியாகராஜன் கூறினார். 
 
கராத்தே தியாகராஜன் இந்த கருத்தை கூறியதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர்தான் டி.என்.சேஷனுக்கு முக ஸ்டாலின் அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது