வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (20:47 IST)

கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் இடிந்தது குறித்துஒரு வாரத்திற்குள் குழு அமைத்து முறைகேட்டை விசாரிக்க வேண்டும் -முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி!

திருச்சி மாவட்டம்,கொள்ளிடம் ஆற்றில் 6.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் இடிந்த விவகாரத்தில் ஒரு வாரத்திற்குள் குழு அமைத்து முறைகேட்டை விசாரிக்க வேண்டும் இல்லை என்றால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என  முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.
 
கர்நாடகாவில் பெய்த தொடர் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட்டு  மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை. எட்டியது. 
 
இதனையடுத்து மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி நீரானது வெளியேற்றப்பட்ட நிலையில், திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றிலும் 40,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும் வெளியேற்றப்பட்டது. 
 
இந்த நிலையில், திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றின் நேப்பியர் மேம்பாலம் அருகே கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, 6.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட தடுப்பணை,  வெள்ளநீரில் 200 மீட்டர் அளவிலான தடுப்பணை சுவர் கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
 
தடுப்பு சுவர் கட்டி குறைந்த நாட்களே ஆன நிலையில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்த நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமையில் உடைந்த தடுப்பணை பகுதியை அதிமுகவினர் பார்வையிட்டனர்.
 
உடைந்த தடுப்பணை பகுதியை பார்வையிட்ட பின்னர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி செய்தியாளர்களிடம்  பேசுகையில்...
 
திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றில் நேப்பியர் வடிவ பாலத்திற்கு கீழே, ரூ.6.55 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர், சாதாரண வெள்ளத்திற்கே உடைந்திருக்கிறது. இதில் நடந்துள்ள முறைகேடுகளை கண்டறிய, இது குறித்து ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில், சிறந்த பொறியாளர்களை கொண்ட ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். ஒரு வாரத்திற்குள் இக்குழுவை அமைக்காவிட்டால், கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் அனுமதி பெற்று, ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் திருச்சியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.