1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 14 மார்ச் 2020 (11:05 IST)

எனக்கு கோரோனா இருக்கு; விளையாட்டாக சொன்ன பெண் – அலறியடித்து ஓடிய பயணிகள்!

சென்னையில் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் தனக்கு கொரோனா இருப்பதாக சொன்னதால் பயணிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் மக்களுக்கு கொரோனா பரவியுள்ளது. இதுவரை கொரோனா வைரஸால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று சென்னையிலிருந்து கோவை சென்ற பேருந்தில் பெண் ஒருவர் பயணித்துள்ளார். மேல்மருவத்தூர் தாண்டி சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்தை நிறுத்த சொல்லியுள்ளார். ஆனால் நடத்துனர் பேருந்தை நிறுத்த மறுத்துவிட்டார். அப்போது அந்த பெண் தனக்கு கொரோனா இருப்பதாகவும், உடனடியாக பேருந்தை நிறுத்துமாறும் கூறியுள்ளார். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக பேருந்தை நிறுத்தி அந்த பெண்ணை இறக்கிவிட்டுள்ளனர்.

பிறகு அருகிலுள்ள சுங்கசாவடிக்கு பேருந்து சென்றது அங்கு விவரத்தை கூறி தங்களை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட டிக்கெட் முன்பதிவு செய்த விவரங்களை வைத்து அந்த பெண்ணை போலீஸ் கண்டுபிடித்து விசாரித்திருக்கிறார்கள்.

சென்னை ஐஐடியில் படித்து வரும் அந்த பெண் பேருந்தை நிறுத்தவேண்டும் என்பதற்காக பொய் சொன்னதாக கேஷுவலாக சொல்லியிருக்கிறார். விளையாட்டு என்ற பெயரில் பொதுமக்களை இப்படி பதற வைப்பதா என அந்த பெண்ணை கண்டித்துள்ளனர்.