1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (10:40 IST)

ஒரு லட்சம் தந்தால் 100 நாளில் இரண்டரை லட்சம் – சத்தியமங்கலத்தில் நூதன மோசடி !

சத்தியமங்கலத்தில் 1300 பேரிடம் 15 கோடி வசூல் செய்த நிறுவனம் அவர்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை பகுதியில் குவாலிட்டி டிரேடர்ஸ் கடந்த சில மாதங்களாக ரிலீப் ஹெர்பல்ஸ்' என்ற பெயரில் மூலம், பவுத்திரம் மற்றும் ஆண்மைக்குறைவு  ஆகிய நோய்களுக்கான மருந்துகளை விறபனை செய்து வருகிறது.

இந்நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு நாளொன்றுக்கு 2500 வீதம் 100 நாளுக்கு 2.5 லட்சம் திருப்பித் தரப்படும் என இணையதளம் மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதை நம்பி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மக்கள் முதலீடு செய்துள்ளனர். இவர்களை நம்ப வைக்க ஆரம்பத்தில் சில நாட்கள் அவர்களின் வங்கிக் கணக்கில் தினமும் 2500 ரூ செலுத்தப்பட்டுள்ளது.

இதனால் பலபேர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். கிட்டதட்ட 1300 பேரிடம் 15 கோடி வரை முதலீடுகளைப் பெற்ற நிறுவனம் பின்னர் பணம் செலுத்துவதை நிறுத்தியுள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த முதலீட்டாளர்கள் பணத்தைத் திரும்ப கேட்க, அந்நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் பொறுப்பாளர்களான தங்கராஜ், ஆனந்த், மற்றும் பிரகாஷ் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர்.

இதையடுத்துப் பணம் கொடுத்து ஏமாந்த கோவில்பட்டியை சேர்ந்த மகாலட்சுமி, சென்னை எர்ணாவூர் பகுதியை சேர்ந்த தென்னரசி, கடலூர் மாவட்டம் திருப்பாபுலியூரை சேர்ந்த சிலம்பரசன் ஆகிய 3 பேரும் சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் பலரும் இது சம்மந்தமாகப் புகார் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.