1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

தமிழக சிறைகளில் 100 சதவீதம் தடுப்பூசி!

தமிழக சிறைகளில் உள்ள தகுதிவாய்ந்த விசாரணைக் கைதிகள் மற்றும் தண்டனைக் கைதிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுசம்மந்தமாக சிறைத்துறை சார்பாக வெளியான செய்தி குறிப்பில் ‘
கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் சற்றும் எதிர்பாராத வகையில் அதிக தொற்று பாதிப்பினை ஏற்படுத்தியது. கடந்த மாதம் சிறைவாசிகளைவிட அதிக எண்ணிக்கையிலான சிறைக் பணியாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தனர்.
ஒரு மாதத்திற்கு முன்னர் குறிப்பிட்ட ஒரு நாளில், அதிகபட்சமாக 222 சிறைப் பணியாளர்கள், 74 விசாரணை சிறைவாசிகள் மற்றும் 16 தண்டனை சிறைவாசிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தனர். கடந்த இரு மாதங்களில் 12 சிறைப்பணியாளர்கள் கரோனா தொற்றால் தங்களது விலைமதிப்பற்ற உயிரினை இழந்துள்ளனர், ஆனால் அதே காலத்தில் தொற்று பாதிப்புக்குள்ளான தண்டனை மற்றும் விசாரணை சிறைவாசிகள் தொற்றிலிருந்து மீண்டனர் மற்றும் சிலர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

சிறை மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையினரின் சீரிய முயற்சியினால், இன்றைய தேதியில் (28.06.2021) 37 சிறைப் பணியாளர்கள் மற்றும் 26 விசாரணை சிறைவாசிகள் மற்றும் ஒரே ஒரு தண்டனை சிறைவாசி மட்டும் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். புதிதாக சிறைபடும் சிறைவாசிகளுக்கு பரிசோதனை மேற்கொள்வதுடன், அறிகுறிகளுடன் உள்ள பழைய சிறைவாசிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்வர்கள், அறிகுறிகள் உள்ள சிறைப் பணியாளர்கள், விடுப்பு முடிந்து திரும்பும் பணியாளர்கள் ஆகியோருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சிறைவாசிகள் நேர்காணல் ரத்து, சிறப்பு மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதுடன், சிறைகளில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தி உயிர்கள் காத்திட, ஒரு முறையான, நீடித்த தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முயற்சி தொடங்கப்பட்டது.

முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி கிடைக்கப்பெற்றவுடன், சிறை அலுவலர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பயந்து முன்வராத நிலையில், அவர்களுக்கு முன்மாதிரியாக சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை டிஜிபி சுனில் குமார் சிங் முதலில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இந்நிலையில் டிஜிபி சுனில் குமார் சிங் கடந்த மே மாதம் 28 ஆம் தேதி சிறைத்துறைத் துணைத் தலைவர்கள் மற்றும் சிறைக் கண்காணிப்பாளர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடல் நடத்தினார்.

அப்போது தடுப்பூசி தொடர்பான அவர்களின் சந்தேகங்கள் மற்றும் தயக்கத்தினை போக்கியதுடன், கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என ஊக்கப்படுத்தி, அனைத்து தகுதிவாய்ந்த பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் தண்டனை மற்றும் விசாரணை சிறைவாசிகளுக்கு தடுப்பூசி செலுத்த ஏதுவாக சிறப்பு முகாம்களை நடத்திட ஏற்பாடுகள் செய்திட அறிவுரை வழங்கினார்.

டிஜிபி சுனில் குமார் சிங், தலைமை செயலாளர் இறையன்புவிடம் இது குறித்து எடுத்துக் கூறியதை அடுத்து தலைமைச் செயலர், இது தொடர்பாக அனைத்து உதவிகளையும் வழங்கிட உறுதியளித்துள்ளார். சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பார்ஸ்பள்ளி, புதுக்கோட்டையில் சிறப்பு தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார். தடுப்பூசி செலுத்தப்படுவதை அதில் ஏற்படும் முன்னேற்றத்தினை டிஜிபி சுனில் குமார் சிங் தனிப்பட்ட முறையில் தினமும் மேற்பார்வையிடப்பட்டு வருகிறார்.

மேலும், கடந்த ஜூன் 11 ஆம் தேதி அன்று சிறைத்துறை தலைமையகத்திற்கு அனைத்து சிறைத்துறைத் துணைத் தலைவர்கள் வரவழைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை அளிக்கவும் மற்றும் சிறைவாசிகள் மற்றும் சிறைப் பணியாளர்கள் விலைமதிப்பற்ற உயிர்களை பாதுகாத்திடவும் மற்றும் கரோனா தொற்று பரவலை அனைத்து சிறைகளிலும் கட்டுப்படுத்திட ஏதுவாக தடுப்பூசி செலுத்தும் பணியினை துரிதப்படுத்திட சிறப்பு ஏற்பாடுகள் செய்திட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இதன் பயனாக நேற்றுவரை, தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் உள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதிவாய்ந்த சிறைப்பணியாளர்கள் (4197) மற்றும் தகுதிவாய்ந்த தண்டனை சிறைவாசிகள் (4099) 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளனர். மேலும், 69 சதவீத விசாரணை சிறைவாசிகளுக்கும் (7616) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, இதில் 100 சதவீத தடுப்புக்காவல் சிறைவாசிகளும் அடங்குவர்.

மீதமுள்ள விசாரணை சிறைவாசிகள், புதிதாக அனுமதிக்கப்படும் சிறைவாசிகள், கரோனா தொற்றிலிருந்து மீண்டு 3 மாதங்கள் நிறைவு செய்த சிறைப்பணியாளர்கள் மற்றும் சிறைவாசிகள், மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய நபர்களுக்கு, தடுப்பூசி செலுத்திட உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ள சிறை அதிகாரிகளுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது'.  எனக் கூறியுள்ளார்.