1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நீரிழிவு நோய் என்பது என்ன? இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன...?

நமது உடலின் இரத்ததில் சர்க்கரை அளவு அதிகமாவது தான் நீரிழிவு நோய். இதற்கு காரணம் இன்சுலின் சரியான அளவு உற்பத்தி ஆகாதது அல்லது உற்பத்தியான இன்சுலினை சரியான அளவு பயன்படுத்த முடியாதது.
நமது உடலில் உள்ள கணையம் என்ற உறுப்பில் இருந்து இன்சுலின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது நாம் உண்ணும் உணவில் உள்ள  சர்க்கரையைக் கொழுப்பாகவும், கிளைகோ ஜென்னாகவும் சேமித்து வைக்க உதவுகிறது. நாம் சாப்பிடும் உணவின் அளவுக்குத் தக்கவாறு  இன்சுலின் தானாகவே சுரந்து இந்தப் பணியைச் செய்கிறது.
 
பல காரணங்களால் கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலினின் அளவு குறையும் போது, உணவில் உள்ள சர்க்கரையானது சக்தியாக மாற்றப்படாமல் அப்படியே இரத்ததில் நேரடியாக கலந்து விடுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. அது 180  மில்லிகிராம் சதவீதத்தைத் தாண்டும் போது சிறுநீரிலும் சர்க்கரை வெளியாகிறது. இவற்றைதான் நீரிழிவு நோய் என்கிறோம்.
 
நீரிழிவு நோய் என்பது இரத்தத்தில் அதிக சர்க்கரையே தவிர சிறுநீரில் அல்ல. இதனால் ஏற்படும் நீண்டகால விளைவுகள் பார்வை இழப்பு, பக்கவாதம், கால் இழப்பு, சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு போன்றவையாகும்.
 
கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய் உடல் உறுப்புக்களை எந்த அறிகுறிகளும் இல்லாமல் மெதுவாக பாதிக்கும். இரத்தக் குழாய்களில் படியும்  சர்க்கரையானது மாரடைப்பு, கண், கால், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். கண் பார்வை  பறிபோகும் அபாயமும் ஏற்படும்.
 
மாரடைப்புக்கான முக்கிய காரணிகளுள் நீரிழிவு நோயும் ஒன்று. கால் நரம்புகள் மோசமாக பாதிக்கப்படுவதால் பலருக்கும் கால்களையோ, கால்விரலையோ அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதை உங்களில் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
 
மாரடைப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்புகளுக்குச் சிகிச்சை செய்ய ஆகும் மருத்துவ செலவுகள் மிக மிக அதிகம். இவற்றையெல்லாம்  கருத்தில் கொண்டு முடிந்தவரை நீரிழிவு நோய் வராமல் தடுப்பதும், அப்படியே வந்துவிட்டாலும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும்  இன்றியமையாதது.