வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

வெந்தயத்தை பயன்படுத்தி நோய்களுக்கு தீர்வு காண...!!

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப்பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் "ஏ"  போன்றவைகளும் அடங்கியுள்ளன.
வெந்தயத்திலுள்ள எண்ணெய் பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது. எனவே கூந்தல் தைலங்கள் தயாரிப்பில்  பயன்படுகிறது.
 
வெந்தயத்திலிருந்து ஈதரை பயன்படுத்தி வாலை வடித்தல் முறையில் ஒருவகை எண்ணை எடுக்கப்படுகிறது. இந்த எண்ணை சோப்பு தயாரிப்பிலும் சமையலிலும் பயனாகிறது. மேலும் வெந்தயத்திலிருந்து ஒரு மணமுடைய எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது சென்ட்,  மணப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
 
வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும். துவர்ப்புத் தன்மை உடையது. வறட்சியகற்றும் தன்மை கொண்டது. விதையிலுள்ள  ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது.
 
சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் வெந்தயம், சீதபேதி, மூலநோய் இவைகளை குணப்படுத்த, முடி உதிர்தல், தோல் நோய், வாய்வுத்தொல்லையை போக்கவும் பயன்படுத்தப்படுகிறது. எண்ணையாக, கரைப்பானாக, லேகியமாக, பொடியாக பயன்படுத்தப்படுகிறது.  யுனானி மருத்துவ முறையில் சளி நீக்கவும், மூல நோய் தீர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.
 
20 கிராம் வெந்தயத்தை வறுத்து, இடித்து 50 கிராம் வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு நாள் நான்குமுறை சாப்பிட சீதபேதி நிற்கும். சிறிதளவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து, மோரில் கலக்கி குடிக்க குணமாகும்.
 
வெந்தயத்தை இளநீரில் ஊற வைத்து அரைத்து குடிக்க சீதபேதி கடுப்பு தீரும். வெந்தயத்தை வாழைப் பழத்திற்குள் வைத்து மூடி இரவு பனியில் வைத்து காலையில் மூன்று நாட்கள் சாப்பிட சீதபேதி குணமாகும்.
 
மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வாய்வு, பொருமல் நீங்கும். வெந்தயம், கடுகு, பெருங்காயம்,  மஞ்சள், இந்துப்பு இவைகளை சம அளவு எடுத்து நெய் வறுத்து பொடியாக்கி உணவுடன் உண்ண வயிற்று வலி தீரும்.