1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Some seeds and its amazing medicinal properties...!!

சில விதைகளும் அதன் அற்புத மருத்துவ குணங்களும்...!!

விதைகள்
ஆமணக்கு விதையின் ஓட்டை நீக்கி, பருப்பை பச்சையாக அரைத்து அல்லது நன்றாக நசுக்கி அனலில் வதக்கி கட்டிகளின் மீது வைத்துக் கட்டினால் கட்டிகள் விரைவில் பழுத்து உடைந்து கட்டிகள் குணமாகும்.

ஆமணக்கு விதையின் பருப்பை பொடித்து சட்டியிலிட்டு வதக்கி துணியில் முடிந்து ஒற்றடமிட்டு வந்தால் உடலில் உண்டான வீக்கங்கள் குணமாகும். இதிலிருந்து  எடுக்கப்படும் எண்ணெய் உடல்வலி மற்றும் மலச்சிக்கலைப் போக்கும்.
 
மாம்பழத்தில் உள்ள விதையின் பருப்புகளை எடுத்து நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு,  வயிற்றுப் புண் நீங்கும். மேலும் மூலச் சூட்டைக் குறைக்கும். உடலுக்கு வலுவூட்டும்.
 
புங்க விதையில் உள்ள பருப்பு தோலில் ஏற்படும் புண், கரப்பான், அலர்ஜி இவற்றைப் போக்கும். இதன் எண்ணெய் வெப்பக் கட்டியைத் தடுக்கும். கண் நோய்களைக்  குணப்படுத்தும்.
 
வேப்ப விதைகளில் மேல் ஓடுகளை எடுத்துவிட்டு பருப்புகளை அரைத்து விஷம் கடித்த இடத்தில் தடவினால் சிறு விஷம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும். இந்த  பருப்புகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வாதநோய்களுக்கு தயாரிக்கப்படும் எண்ணெய்களில் சேர்க்கப்படுகிறது. 
 
விதையின் மேல் ஓட்டை எரித்து அதிலிருந்து வரும் புகையை நுகர்ந்தால் தலையில் உள்ள நீர் இறங்கும். நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் வேப்ப எண்ணெய்யை  தடவி வந்தால் நரம்புகள் வலுவடையும்.
 
பிரம்ம விருட்சம் என அழைக்கப்படும் முருங்கையின் முற்றிய விதையை எடுத்து பொடி செய்து பாலில் கலந்து கொதிக்க வைத்து ஒரு மண்டலம் அருந்தி  வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். மேலும் நரம்புத் தளர்வு, உடல் சோர்வு, இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்தும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
உடல் எடை குறைக்க உதவுமா எலுமிச்சை சாறு....?