1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மஞ்சள் காமாலையை குணமாக்கும் சித்த மருத்துவம்

மஞ்சள் காமாலையை குணமாக்கும் சித்த மருத்துவம்

பொதுவாக மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத்தாதபோதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற பாதையில் ஏற்படும் அடைப்பினாலும் காமாலை ஏற்படுகிறது. 


 
 
மேலும், ரத்த சிவப்பணுக்கள் அழிவதினாலும், பிறவிலேயே ரத்தத்தில் உள்ள பிலிரூஃபின் அளவு அதிகரித்துக் காணப்படுவதாலும், காமாலை நோய் வைரஸ் கிருமிகளாலும், சில வகை மருந்துகளினாலும், மது அருந்துவதாலும் ஏற்படுகிறது.
 
அறிகுறிகள்:
 
சோர்வு, பலவீனம், உடல் அரிப்பு, வாந்தி, குமட்டல், பசியின்மை, மலக்கட்டு, கழிச்சல், சுரம், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
 
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
 
* கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம். அரை ஸ்பூன் கடுக்காய்ப்பொடியை நீரில் கலந்து குடிக்கலாம்.
 
* சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்தலாம்.
 
* வேம்பின் துளிர், முதிர்ந்த இலை இரண்டையும் பொடித்து இதற்கு அரைபங்கு ஒமம், உப்பு சேர்த்து அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
 
* நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து அருந்தலாம்.
 
* ஒரு ஸ்பூன் வெட்டி வேர்ப்பொடியில் அரை டம்ளர் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்துப் பருகலாம்.
 
* சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமஅளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் காலையில், சிறு எலுமிச்சை அளவு உண்டு, பிறகு சிவதைப் பொடி அரைஸ்பூன் உண்ணலாம்.
 
* சீரகத்தைக் கரிசாலைச் சாற்றில் ஊறவிட்டு பொடித்தப் பொடி நான்கு கிராம், சர்க்கரை இரண்டு கிராம், சுக்குப் பொடி இரண்டு கிராம் கலந்து அதில் ஒரு ஸ்பூன் உண்ணலாம்.
 
சேர்க்க வேண்டியவை:
 
சின்ன வெங்காயம், மோர், இளநீர், பேயன் வாழைப்பழம் (அ) நாட்டு வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், வெண் பூசணி, தர்பூசணி, மாதுளம்பழம், வெள்ளரிக்காய்.
 
தவிர்க்க வேண்டியவை:
 
அசைவ உணவுகள், எண்ணெய், நெய், காரம்.