வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மருந்தாக பயன்படும் ரோஜா இதழ்கள் எதற்கு தெரியுமா...?

ரோஜா இதழ்களைக்கொண்டு சர்பத் தயார் செய்து வைத்துக்கொண்டால் ருசிக்கு ருசியாகவும் இருக்கும் மருந்துக்காகவும் பயன்படும். நாள்தோறும் ரோஜா மலர்  இதழ்களைக் கொண்டு செய்த சர்பத் அருந்தி வந்தால் முலச்சூடு தணியும். நீர்கட்டு மலக்கட்டு விலகும்.

உடற்சூடு தணிந்து உடல் இதமான குளிர்ச்சியைப் பெறும். ரோஜா மலர் மொட்டை துவையல் செய்து சாப்பிட்டால் சீதபோதி அகலும். காதில் கட்டி ஏற்பட்டு கடுமையான வலியுடன் சீழ் வந்தால் மின்மினிப் பூச்சியென்றை பிடித்து ரோஜா இதழ்களுடன் சேர்த்து அரைத்து இலேசாக சுடவைத்து காதில் இரண்டிரண்டு  சொட்டுக்கள் வீதம் விட்டு வந்தால் விரைவில் உடைந்து சரியாகிவிடும்.
 
எந்த பிரச்சனையால் சீழ் வந்தாலும் நின்றுவிடும். காதில் என்ன காரணத்தால் வலி குத்தல் இருந்தாலும் அபினியைச்சுட்டு சாம்பலாகச் செய்து அந்தச்சாம்பலை இரண்டு அரிசி அளவில் எடுத்து ரோஜா பூவினால் தயாரிக்கப்பட்ட தைலத்துடன் கலந்து இலேசாகச் சூடு செய்து இரண்டிரண்டு சொட்டுகள் வீதம் காதில் விட்டு வர  வேண்டும்.
 
பித்த நீர் அதிகமாகும் காரணத்தால் தோன்றும் மயக்கம், வாய்க்கசப்பு, நெஞ்செரிச்சல் போன்ற கோளாறுகளைத் தீர்க்க ரோஜாப் பூவைக் கஷாயம் செய்து பசுவின்  பாலுடன் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்துப் பருகினால் குணம் தெரியும். ரோஜா பூவினால் தயார் செய்யப்பட்ட குல்கந்து மருந்து கடைகளில்  கிடைக்கும். அதை வாங்கி வைத்து காலையிலும், மாலையிலும், சாப்பிட்டு வந்தால் இரத்த பேதி, பித்தக் கோளாறுகள் வெள்ளை முதலிய பிணிகள் விலகிவிடும்.
 
ரோஜாப்பூ கஷாயத்துடன் காட்டுச்சீரகத்தை சேர்த்து அரைத்து மெல்லிய துணியால் நனைத்து முகரச் செய்தால் மூக்கடைப்பு, ஜலதோஷத்தினால், ஏற்படக்கூடிய பல்வேறு வகைக்கோளாறுகள் அகலும். சிலருக்கு வாய் நாற்றம் இருந்தால் வெற்றிலை பாக்குடன் ரோஜா இதழ்களைப்போட்டுக் கொள்வதனால் நாற்றம் நீங்கி நலம்  பெறலாம்.
 
ரோஜா பூக்களில் இருந்து ‘அத்தர்’ எனப்படும் நறுமணம் கொண்ட எண்ணெய் எடுக்கப்படுகிறது. தாகம், கீழ்வாய் எரிச்சல், வெள்ளைப்படுதல் ஆகியவற்றை  குணப்படுத்தவும், மலமிளக்கவும் ரோஜா பூக்கள் பயன்படுகின்றன.