1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பயன் மிகுந்த பல்வேறு மூலிகைகளின் மருத்துவ பயன்கள் !!

அகத்தி கீரை: கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் மற்றும் கோப்பி தேனீர் குடிப்பதால் ஏற்படும் உடல் வெப்பம் தணியும்.


இலைச்சாறும், நல்லெண்ணெய்யும் சமஅளவு எடுத்து பதமாகக் காய்ச்சி தலையிலிட்டு வாரம் ஒருமுறைக் குளித்து வர பித்தம் தணிந்து தலைவலி நீங்கும்.
 
இலுப்பை: இலுப்பை இலையை மார்பகத்தில் வைத்துக் கட்டி வர பால் சுரப்பு மிகும். இலுப்பை எண்ணெயை வெதுவெதுப்பாக சூடு செய்து தடவி செந்நீர் ஒற்றடம் கொடுக்க இடுப்பு வலி தீரும். 10 கிராம் பூவை 200 மி.லி. பாலில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்து வர தாது பெருகும்.
 
இலந்தை: இலை - 1பிடி, மிளகு - 6, பூண்டு - 4 எடுத்து அரத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வர கருப்பைக் குற்றங்கள் நீங்கி பெண் மலடு நீங்கும். பச்சை இலையை அரைத்து சிறு எலுமிச்சை அளவு புளித்த மோரில் கொடுக்க எருவாய்க் கடுப்பு குணமாகும்.
 
ஆவாரை: பூவின் சூரணத்தையோ அல்லது பூவைக் குடிநீராக்கி பாலில் கலந்து தினமும் குடிக்க மேகவெட்டை, உடல்சூடு இவைநீங்கும். ஆவாரை இலை பூ, காய்,  பட்டை, வேர் என இவ்வைந்தின் குடிநீரைக் குடிக்கச் செய்ய நீரிழிவு தீரும்.
 
ஆனை நெருஞ்சில்: இலயை அரைத்துப் பற்றிட காயங்கள் ஆறும். இதன் இலையை நீரில் கலக்க நீர் வழுவழுப்பாக மாறும். இதனை சிறிது சர்க்கரை சேர்த்து நாள்தோறும் காலையில் பருகி வர வெள்ளை, நீர்க்கடுப்பு, சொட்டு மூத்திரம் இவை தீரும்.
 
ஆடுதீண்டாப்பாளை: உலர்ந்த இலை - 10 கிராம் அளவு எடுத்து கால் படி வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி 15 மி.லி. - 30 மி.லி. வீதம் உள்ளுக்குக்  கொடுக்க நுண்புழுக்கள் சாகும். வேரை அரைத்து 4 கிராம் அளவுக்கு உள்ளுக்கு கொடுக்க பாம்பு நஞ்சு முறியும். இலைச்சாறுடன் நல்லெண்ணெய் கூட்டி எரித்து பக்குவமாக்கி வடிகட்டி கரும்படை, கரப்பான் இவைகளுக்கு பூச குணமாகும்.
 
ஆமணக்கு: இலையை விளக்கெண்ணெய் தடவி அனலில் வாட்டி மார்பகத்தில் வைத்துக் கட்டி வர பால் சுரப்பு மிகுதியாகும். கண் வலியின் போதும், கண்ணில் தூசி  விழுந்த போதும் ஒரிரு துளி விளக்கெண்ணெய் கண்ணில் விட வலி நீங்கும். ஆமணக்குத் துளிர் இலைகளை விளக்கெண்ணெய்யில் வதக்கி அடிவயிற்றில்  வைத்துக் கட்ட மாதவிடாய் வயிற்று வலி தீரும்.