வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா சீரகம்...!

சீரகத்தையும், மிளகையும் சமபங்கு எடுத்து பாலோடு சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து வைத்திருந்து அரை மணி நேரம் கழித்து குளிக்க தலை அரிப்பு, பொடுகு, பேன் முதலியன ஒழியும்.
ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் சுமார் 30 கிராம் சீரகத்தை பொடித்து போட்டு நன்றாக காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு தலைக்கு தேய்த்து, சிறிது  நேரங்கழித்து குளித்துவர தலை உஷ்ணம், உடற்சூடு, தோல்நோய்கள் ஆகியன குணமாகும்.
 
சீரகத்தை அரைத்து ஒரு கரண்டி அளவு எடுத்து எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க கர்ப்பிணிகளுக்குத் துன்பம் தரும் வாந்தி குணமாகும்.
 
செரிமான பிரச்சனைகள் இருந்தால் சீரகத் தண்ணீரை குடிப்பதால் உடனடியான நிவாரணம் கிடைக்கும். சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது. 
 
நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும். மேலும் ரத்தத்தில்  சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகுக்கும். சீரக நீர் சுவாச கட்டமைப்புக்கும் நன்மை சேர்க்கும். சளியை குணப்படுத்தவும் உதவும்.
 
சீரகப் பொடி கற்கண்டு தூள் சேர்த்து தினம் இரு வேளை சாப்பிட்டு வர குத்திருமல், வறட்டு இருமல் என வரும் எந்த இருமலும் தணியும்.
 
5 கிராம் சீரகத்தோடு 20 கிராம் கறிவேப்பிலை சேர்த்து அரைத்து வாயிட்டு வெந்நீர் குடித்துவிட வயிற்றுப் போக்கு குணமாகும்.
 
சீரகத்தை ஒரு கரண்டி அளவு திராட்சை சாற்றுடன் சேர்த்துக் குடிக்க உயர் ரத்த அழுத்தம் குறையும்.
 
சீரகத்தோடு இரண்டு வெற்றிலை 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டு பின் குளிர்ந்த நீர் ஒரு டம்ளர் சாப்பிட வயிற்றுப் பொருமல் வயிற்று வலி குணமாகும்.