செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அற்புத பயன்தரும் மூலிகைகளும் அதன் மருத்துவ குணங்களும் !!

தண்ணீர்விட்டான் கிழங்கு: இலைச்சாறுடன் சம அளவு பால் கலந்து பருகி வர உடல் வெப்பம் தணியும். கிழங்கைப் பொடித்து தேனில் அல்லது பாலில் இருவேளை சாப்பிட உடல் உரமாகும்.

தழுதாழை: இலையை நீரில் கொதிக்க வைத்துக் குளிக்க வாதவலி அனைத்தும் நீங்கும். இலைச்சாற்றை மூக்கால் உறிஞ்ச மண்டைக் குடைச்சல், மூக்கு நீர்  பாய்தல் குறையும்.
 
திருநீற்றுப்பச்சிலை: இலையை அரைத்துப் பூச கட்டி மறையும். இலையை முகர்வதால் தலைவலி, தூக்கமின்மை ஆகியவை தணியும்
 
துத்தி: இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வர இரத்த மூலம், சீழ்மூலம் ஆகியவை தீரும். பூவின் சூரணத்துடன் சமன் சர்க்கரை கலந்து அரை தேக்கரண்டி அளவு காலை, மாலை பாலில் கொள்ள காசம், நுரையீரல் கபம் ஆகியவை தீரும்.
 
தும்பை: தும்பைப் பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி முழுக தலைப்பாரம், நீரேற்றம் தீரும். இலையை அரைத்துத் தடவி குளிக்க நமைச்சல், சொறி, சிரங்கு தீரும்.
 
துளசி: இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்த சாறு 5 மி.லி காலை, மாலை சாப்பிட்டு வர பசி அதிகரிக்கும். துளசி - 50 கிராம், மிளகு - 20 கிராம், இவற்றை  மையாய் அரைத்து பயறளவு மாத்திரையாக்கி காலை, மாலை வெந்நீரில் இழைத்துக் கொடுக்க சகலவித காய்ச்சலும் தீரும்.
 
நாய்த்துளசி: இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு தயிரில் கலந்து காலை, மாலை கொடுக்க மூலச்சூடு கணச்சூடு ஆகியவை தீரும். இலையை அரைத்துத் தடவிக் குளிக்க சொறி, சிரங்கு ஆகியவை தீரும்.
 
நாய்வேளை: இலைச்சாற்றை சமஅளவு நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி வடித்துக் காதில் விட்டு வரச் சீழ்வடிதல் தீரும். நாய்வேளை இலையைப் பிற  கீரைகளுடன் சமைத்து சாப்பிட வயிற்று வாயுவு அகலும், பசி மிகும்.