1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Amazing Useful Herbs and Its Medicinal Properties !!

அற்புத பயன்தரும் மூலிகைகளும் அதன் மருத்துவ குணங்களும் !!

மூலிகைகள்
தண்ணீர்விட்டான் கிழங்கு: இலைச்சாறுடன் சம அளவு பால் கலந்து பருகி வர உடல் வெப்பம் தணியும். கிழங்கைப் பொடித்து தேனில் அல்லது பாலில் இருவேளை சாப்பிட உடல் உரமாகும்.

தழுதாழை: இலையை நீரில் கொதிக்க வைத்துக் குளிக்க வாதவலி அனைத்தும் நீங்கும். இலைச்சாற்றை மூக்கால் உறிஞ்ச மண்டைக் குடைச்சல், மூக்கு நீர்  பாய்தல் குறையும்.
 
திருநீற்றுப்பச்சிலை: இலையை அரைத்துப் பூச கட்டி மறையும். இலையை முகர்வதால் தலைவலி, தூக்கமின்மை ஆகியவை தணியும்
 
துத்தி: இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வர இரத்த மூலம், சீழ்மூலம் ஆகியவை தீரும். பூவின் சூரணத்துடன் சமன் சர்க்கரை கலந்து அரை தேக்கரண்டி அளவு காலை, மாலை பாலில் கொள்ள காசம், நுரையீரல் கபம் ஆகியவை தீரும்.
 
தும்பை: தும்பைப் பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி முழுக தலைப்பாரம், நீரேற்றம் தீரும். இலையை அரைத்துத் தடவி குளிக்க நமைச்சல், சொறி, சிரங்கு தீரும்.
 
துளசி: இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்த சாறு 5 மி.லி காலை, மாலை சாப்பிட்டு வர பசி அதிகரிக்கும். துளசி - 50 கிராம், மிளகு - 20 கிராம், இவற்றை  மையாய் அரைத்து பயறளவு மாத்திரையாக்கி காலை, மாலை வெந்நீரில் இழைத்துக் கொடுக்க சகலவித காய்ச்சலும் தீரும்.
 
நாய்த்துளசி: இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு தயிரில் கலந்து காலை, மாலை கொடுக்க மூலச்சூடு கணச்சூடு ஆகியவை தீரும். இலையை அரைத்துத் தடவிக் குளிக்க சொறி, சிரங்கு ஆகியவை தீரும்.
 
நாய்வேளை: இலைச்சாற்றை சமஅளவு நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி வடித்துக் காதில் விட்டு வரச் சீழ்வடிதல் தீரும். நாய்வேளை இலையைப் பிற  கீரைகளுடன் சமைத்து சாப்பிட வயிற்று வாயுவு அகலும், பசி மிகும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
கை நடுக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன...?