வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 28 நவம்பர் 2016 (16:10 IST)

நான் நிதி அமைச்சராக இருந்திருந்தால்...? - விளக்கும் ப.சிதம்பரம்

பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்க போவதாக பிரதமர் என்னிடம் கூறியிருந்தால் நான் ராஜினாமா செய்திருப்பேன் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.


 

பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, .பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டதோடு, 70க்கும் மேற்பட்ட உயிரழிப்புகள் ஏற்பட்டன. மேலும், இதற்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.

இந்நிலையில், இது குறித்து டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், ”ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் கருப்பு பணத்தை ஒழித்துவிட முடியாது. இதன் மூலம் ஊழலையும் ஒரு போதும் அகற்றி விட முடியாது

ஊழலை ஒழிக்க காங்கிரஸ் கட்சி விழிப்புணர்வுடன் செயல்படவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். காங்கிரசை சேர்ந்த மத்திய அமைச்சர்களும் இந்த வி‌ஷயத்தில் விழிப்புணர்வுடன் செயல்படவில்லை” என்றார்.

மேலும், அருண் ஜேட்லி இடத்தில் நீங்கள் தற்போது இருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பபட்டது.

அதற்கு பதிலளித்த சிதம்பரம், ”ரூ. 1000, 500 தாள்களை சட்ட விரோதம் என்று அறிவிக்க போவதாக பிரதமர் என்னிடம் கூறியிருந்தால், இதை செய்ய வேண்டாம் என்று நான் கூறியிருப்பேன்.

ஆனால், பிரதமர் இது என்னுடைய முடிவு, நீங்கள் செய்ய வேண்டும் என்று பிரதமர் கூறியிருந்தால், நான் ராஜினாமா செய்து இருப்பேன்” என அவர் கூறியுள்ளார்.