வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : புதன், 10 மே 2017 (22:33 IST)

குஜராத் ராணுவ வீரர்கள் மட்டும் வீரமரணம் அடையாதது ஏன்? அகிலேஷ் யாதவின் சர்ச்சை கருத்து

கடந்த சில மாதங்களாகவே இந்திய ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளால் மரணம் அடைந்து வருவது வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில் கூட தமிழகத்தை சேர்ந்த 3 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர்.


 


மேலும் காஷ்மீரில் இரு ராணுவ வீரர்களின் உடல்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிதைக்கப்பட கொடூர சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நேற்று இந்திய ராணுவத்தைச் சேர்ந்த உமர் பயாஸ் என்பவரும் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் இதுவரை வீரமரணம் அடைந்தவர்களை இந்திய ராணுவ வீரர்கள் என்று தான் ஊடகங்களும் மற்றவர்களும் குறிப்பிட்டு வரும் நிலையில் உபி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:  'உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தென் இந்தியா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வீர மரணமடைந்த செய்திகள் வருகிறதே, என்றாவது குஜராத்தைச் சேர்ந்தவர்கள் வீர மரணமடைந்த செய்தி வந்துள்ளதா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் குஜராத் என்பதால் அவர் இவ்வாறு கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எந்த ஒரு இந்திய வீரரும் மரணம் அடையக்கூடாது என்பது தான் அனைவரின் கருத்தாக இருக்கும் நிலையில் குஜராத் வீரர்கள் மட்டும் ஏன் மரணம் அடையவில்லை என்று கேள்வி கேட்பது அவரது முதிர்ச்சி இன்மையை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.