1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2019 (17:17 IST)

முத்தலாக் தடை மசோதா: அதிமுக-வின் நிலைப்பாடு என்ன??

முத்தலாக் தடை மசோதா குறித்த நிலைப்பாட்டில் முரண் ஏற்பட்டுள்ளதால், அதிமுக-வின் நிலை என்ன என்பது குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.

முஸ்லீம் பெண்களை, அவர்களது கணவர்கள், முன்று முறை ”தலாக்” கூறி விவாகரத்து செய்வது இஸ்லாமிய வழக்கமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த வழக்கத்தை தடை செய்யும் வகையில் கடந்த பாஜக ஆட்சியின் போது, முத்தலாக் தடை மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவை காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் எதிர்த்து வந்தனர்.

இதை தொடர்ந்து மக்களவையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேறியது. ஆனால் மாநிலங்கவையில் பா.ஜ,க. கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால் முத்தலாக் தடை மசோதா நிலுவையிலேயே இருந்தது. இதனிடையே மக்களவையின் பதவி காலம் முடிவடைந்து கலைக்கப்பட்டதால், முத்தலாக் தடை சட்டம் காலாவதியானது.

இந்நிலையில் தற்போதைய பாஜக அரசின், முதல் மக்களவை கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், முத்தலாக் மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மாநிலங்களவையிலும் இன்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்தபோது அந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக எம்.பி.யான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் இன்று மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றபோது அதிமுக சார்பில் பேசிய நவநீதகிருஷ்ணன், முத்தலாக் தடை மசோதாவை அதிமுக எதிர்ப்பதாக கூறினார். அதன் பிறகு மசோதா மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய சூழல் வந்தபோது, அதிமுக எம்.பி.க்கள் வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தனர்.

அதிமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்ததால், முத்தலாக் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அதற்கு எதிராக வாக்களிக்க முடியாமல் போனது. இந்த முரண்பாட்டால் முத்தலாக் தடை மசோதா குறித்த அதிமுக-வின் நிலைப்பாடு என்ன? என்பது குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.