வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2019 (14:32 IST)

முத்தலாக் தடை மசோதா: மாநிலங்கவையில் இன்று தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர்

முத்தலாக் தடை சட்டம் மசோதா, இன்று மாநிலங்களவையில், எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையில் தாக்கல் செய்யப்பட்டது.

முஸ்லீம் பெண்களை, அவர்களது கணவர்கள், முன்று முறை ”தலாக்” கூறி விவாகரத்து செய்வது இஸ்லாமிய வழக்கமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த வழக்கத்தை தடை செய்யும் வகையில் கடந்த பாஜக ஆட்சியின் போது, முத்தலாக் தடை மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவை காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் எதிர்த்து வந்தனர்.

இதை தொடர்ந்து மக்களவையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேறியது. ஆனால் மாநிலங்கவையில் பா.ஜ,க. கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால் முத்தலாக் தடை மசோதா நிலுவையிலேயே இருந்தது. இதனிடையே மக்களவையின் பதவி காலம் முடிவடைந்து கலைக்கப்பட்டதால், முத்தலாக் தடை சட்டம் காலாவதியானது.

இந்நிலையில் தற்போதைய பாஜக அரசின், முதல் மக்களவை கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், முத்தலாக் மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மாநிலங்களவையிலும் இன்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.

மேலும் முத்தலாக் தடை மசோதாவை மாநிலங்கவையில் நிறைவேற்ற பாஜக தீவிரம் காட்டி வருவதால், அனைத்து எம்.பி.க்களும் தவறாமல் மாநிலங்களவைக்கு வரவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாஜக-வின் இந்த முத்தலாக் தடை மசோதாவிற்கு பல முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து சிறுபான்மையினர் உரிமைகளில் தலையிட்டு வருவதாக திமுக குற்றச்சாட்டு வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.