1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (17:42 IST)

பனிச்சரிவில் சிக்கிய மலையேற்ற குழு.. 27 உடல்கள் மீட்பு! – உத்தரகாண்டில் சோகம்!

Uttarkhand
உத்தரகாண்டில் திரவுபதி கா மலை சிகரத்தில் ஏற முயன்ற மலையேற்ற குழு பனிச்சரிவில் புதைந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நேரு மலையேற்ற பயிற்சி நிலையம் உள்ளது. இந்த பயிற்சி நிலையத்தை சேர்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சி பெறுபவர்கள் அடங்கிய 29 பேர் கொண்ட குழு அருகே உள்ள திரவுபதி கா தண்டா மலை சிகரத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்டனர்.


கடந்த 4ம் தேதியன்று இவர்கள் சுமார் 17 ஆயிரம் அடி உயரத்தில் மலையேற்றத்தில் இருந்தபோது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் மலையேற்ற குழு சிக்கிய நிலையில் அவர்களை மீட்க இந்திய விமானப்படை, பேரிடர் மீட்புப்படை மற்றும் ராணுவம் தீவிரமாக களமிறங்கியது.

கடந்த சில நாட்களாக மீட்பு பணிகள் தொடர்ந்து வந்த நிலையில் இன்று 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. முன்னதாக வெள்ளிக்கிழமை நான்கு உடல்கள் மீட்கப்பட்டிருந்தது. இதுவரை மொத்தம் 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மலையேற்ற குழுவினர் அனைவரும் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பனிச்சரிவில் புதைந்த மற்றவர்களை தேடும் பணி தொடர்கிறது.

Edited By: Prasanth.K