1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 16 ஜூன் 2021 (11:06 IST)

டெஸ்ட் எடுக்காமலே 1 லட்சம் போலி கொரோனா ரிசல்ட்! – அம்பலமான தனியார் நிறுவன மோசடி

கும்பமேளாவில் கலந்து கொண்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தனியார் நிறுவனம் பரிசோதனை செய்யாமலே போலி தகவல்களை அளித்துள்ளது அம்பலமாகியுள்ளது.

நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா இந்த ஆண்டு ஏப்ரலில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்தது. கொரோனா பரவல் அதிகமுள்ள நிலையில் சுமார் 70 லட்சம் பேர் கும்பமேளாவில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கும்பமேளாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்ய உத்தரகாண்ட் அரசு 9 நிறுவனங்கள் மற்றும் 22 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி அளித்தது. ஆண்டிஜென் பரிசோதனைக்கு ரூ.350, ஆர்டிபிசிஆர் சோதனைக்கு ரூ.100 என்ற கணக்கில் தனியார் நிறுவனங்களுக்கு தொகை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தனியார் நிறுவனங்கள் அளித்த கொரோனா சோதனை முடிவுகளில் ஒரு லட்சம் சோதனைகள் போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல சோதனைகளுக்கு ஒரே மொபைல் எண், முகவரிகள் வழங்கப்பட்டுள்ளதும், ஆண்டிஜென் சோதனைகள் வெவ்வேறு எண்களுக்கு பதிலாக ஒரே எண்ணில் பல சோதனைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதனால் சோதனை செய்யாமலே சோதனை செய்ததாக காட்டி அரசிடம் தனியார் நிறுவனங்கள் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான விரிவான விசாரணைக்கு உத்தரகாண்ட் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.