1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (11:27 IST)

என் சொத்து முழுசும் ராகுல் காந்திக்குதான்..! – மூதாட்டியின் ஆச்சர்ய செயல்!

Rahul Gandhi
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது சொத்துகளை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு உயில் எழுதி வைத்தது வைரலாகியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் டெராடூனில் வசித்து வருபவர் மூதாட்டி புஷ்பா. ஆசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்ற இவர் டெராடூனில் நல்ல வசதியான சொந்த வீட்டில் வாழ்ந்து வருவதோடு, வங்கியில் பணத்தையும் சேமித்து வைத்துள்ளார். திருமணமாகாமல் தனியாக வசித்து வரும் புஷ்பா தனக்கு பிறகு இந்த சொத்துகளை யாருக்கு வழங்குவது என்று யோசித்துள்ளார்.

பின்னர் டெராடூன் நீதிமன்றம் சென்ற அவர் தனக்கு பிறகு தனது ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்திக்கு வழங்க வேண்டும் என உயில் எழுதி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து கூறியுள்ள புஷ்பா “இந்த நாட்டின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்காக இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் உயிரையே கொடுத்தார்கள். அவர்கள் வழியில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் சேவை செய்து வருகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்புக்காக ராகுல்காந்திக்கு என் சொத்துகளை வழங்குகிறேன்” என தெரிவித்துள்ளார்.