வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 மே 2020 (14:45 IST)

வெட்டுக்கிளிகள் படை தென்னிந்தியா வராது! – ஐ.நா கணிப்பு!

ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பிய வெட்டுக்கிளிகள் இந்தியாவிற்குள் நுழைந்துள்ள நிலையில் அவை தென்னிந்தியா நோக்கி வராது என்று ஐ.நா விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்தே இந்தியா இன்னும் மீளாத சூழலில், ஆப்பிரக்காவிலிருந்து கிளம்பி பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்திருக்கிறது வெட்டுக்கிளிகள் படை. இந்தியாவின் வடமேற்கு பகுதிகளான பஞ்சாப், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் நுழைந்துள்ள வெட்டுக்கிளிகள் அங்குள்ள விவசாய நிலங்களை துவம்சம் செய்து வருகின்றன. வெட்டுக்கிளிகளை ஒழுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய, மாநில அரசுகள் விவசாய நிலங்களில் பூச்சி மருந்துகளை தெளிப்பது, ட்ரோன்கள்  மூலமாக பூச்சி மருந்து தெளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளுக்கு வந்துவிடுமோ என விவசாயிகள் பலர் அச்சத்தில் உள்ளனர். ஆனால் இந்த வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பில்லை என தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு வட இந்தியாவில் புகுந்துள்ள வெட்டுக்கிளிகள் படை தென்னிந்தியா வர வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது. மாறாக அவை கிழக்கு நோக்கி ஒடிசா மற்றும் பீகார் பகுதிகளுக்கு செல்லும் அபாயம் உள்ளதாகவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.