1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: சனி, 23 நவம்பர் 2019 (14:13 IST)

”சிவசேனாவை தொட்டு பாருங்கள்.. மஹாராஷ்டிரா தூங்காது” எச்சரிக்கும் உத்தவ் தாக்கரே

மஹாராஷ்டிராவில் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே ஆட்சி அமைப்பது குறித்தான இழுபறி நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் திடீர் திருப்பமாக இன்று காலை பாஜகவை சேர்ந்த ஃபட்நாவிஸ் முதல்வராக பதவியேற்றார். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

முன்னதாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத கூட்டணி ஆகிய கட்சிகள் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைப்பது குறித்தான பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. அதன் பின்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைப்பதற்கு ஒருமித்த கருத்து ஏற்பட்டது. இந்நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்று பாஜகவின் ஃபட்நாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திடீரென பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது குறித்து அக்கட்சியின் தலைவர் சரத்பவார், “பாஜகவோடு சேர்ந்து ஆட்சி அமைப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல, இது அஜித் பவாரின் சொந்த முடிவு” என கூறியுள்ளார்.

இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித்பவாருக்கு ஆதரவாக சிலரும், எதிர்ப்பாக சிலரும் இருப்பதால் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிவசேனாவை சேர்ந்த உத்தவ் தாக்கரே “சிவசேனாவை முடிந்தால் உடைத்து பாருங்கள், அப்படி ஒன்று நடந்தால் மஹாராஷ்டிராவே தூங்காது” என எச்சரித்துள்ளார்.

முன்னதாக 22 எம்.எல்.ஏ.க்கள் அஜித் பவாருக்கு ஆதரவு அளித்ததாக கூறப்பட்ட நிலையில் உத்தவ் தாக்கரே இவ்வாறு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.