1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 மார்ச் 2024 (17:33 IST)

அம்பானி திருமண விழாவில் திருச்சி திருடர்கள் கைவரிசை! – டெல்லியில் அதிரடி கைது!

crime
சமீபத்தில் நடந்த அம்பானி வீட்டு திருமண நிகழ்வில் திருட்டில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.



இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அனில் அம்பானி. இவரது இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானிக்கும், பிரபல தொழிலதிபர் விரென் மெர்ச்சண்டின் மகளான ராதிகா மெர்ச்செண்டுக்கும் திருமணம் செய்வதாக முடிவு செய்யப்பட்டு திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஜூலை 12ம் தேதி நடக்கவிருக்கும் திருமணத்திற்கு கடந்த மார்ச் 1 முதல் 3 நாட்களுக்கு அம்பானி இல்லம் உள்ள ஜாம்நகரில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பல உலக பணக்காரர்கள், நடிகர்கள், அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியின்போது அம்பானி இல்ல விழாவிற்கு வந்திருந்த ஒருவர் நிறுத்தி வைத்திருந்த காரை உடைத்து அதில் இருந்து பொருட்களை மர்ம கும்பல் திருடி சென்றதாக தகவல்கள் வெளியானது. ரூ.10 லட்சம் பணம், லேப்டாப் உள்ளிட்டவை திருடு போனதாக கூறப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் தற்போது திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த 5 பேரை டெல்லியில் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K