1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 25 டிசம்பர் 2019 (12:27 IST)

ஃபாஸ்டாக்கால் திருடு போன காரை கண்டுபிடித்த போலீஸ்!

டிசம்பர் 15ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டாக் முறை அமல்படுத்தப் பட்டது என்பது தெரிந்ததே. இந்த முறையால் நீண்ட நேரம் காத்திருப்பது மற்றும் சில்லரை பிரச்சனை ஆகியவற்றுக்கு தீர்வு கிடைத்தது. இந்த நிலையில் இந்த முறையால் திருடுபோன கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தகவல் தெரியவந்துள்ளது
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியில் ராஜேந்திரன் என்பவர் தனது காரை தன்னுடைய வீட்டு வாசலில் இரவு நிறுத்தி விட்டு தூங்கச் சென்று விட்டார். சில மணி நேரம் கழித்து திடீரென அவரது மொபைலுக்கு உங்கள் கணக்கிலிருந்து ரூபாய் 35 கழிக்கப்பட்டதாக ஒரு குறிப்பிட்ட சுங்கச் சாவடியில் இருந்து எஸ்எம்எஸ் வந்தது. வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு சுங்கச் சாவடியில் எப்படி பணம் கழிப்பார்கள் என்று குழப்பம் அடைந்த ராஜேந்திரன் வாசலில் வந்து பார்த்த போது கார் திருடு போனது தெரியவந்தது 
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது இன்னொரு சுங்கச்சாவடியை அந்த கார் தாண்டியுள்ளதாகவும், அதற்காக ரூபாய் 40 ஃபாஸ்டாக்கில் இருந்து கழிக்கப்பட்டதாகவும் சுங்கச் சாவடியில் இருந்து எஸ்.எம்.எஸ் வந்தது. இதனை அடுத்து சுதாரித்த காவல்துறையினர் உடனடியாக அந்த குறிப்பிட்ட சுங்கச் சாவடி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் 
 
இதையடுத்து அடுத்த அரை மணி நேரத்தில் கார் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் காரை திருடிய மர்மநபர்கள்  தப்பி ஓடிவிட்டனர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காரை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஃபாஸ்டாக் முறையால் திருடு போன கார் ஒரு சில மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது