1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 ஜூலை 2024 (11:32 IST)

மணிப்பூர் மக்களின் கோபத்தின் அடையாளமான நிற்கிறேன்! பதில் சொல்லுங்க!? - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்!

Bimol Agoijam
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்கட்சியினர் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது மணிப்பூர் எம்.பி ஒருவர் பிரதமர் மோடியை நோக்கி மணிப்பூர் கலவரம் குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



பாஜக மூன்றாவது முறையாக தொடர்ந்து மத்தியில் ஆட்சியமைத்த நிலையில் தொடங்கியுள்ள முதல் நாடாளுமன்ற கூட்டத்தில் அனைத்து கட்சி எம்.பிக்களும் பேசி வரும் நிலையில், எதிர்கட்சி எம்.பிக்கள் பாஜக அரசை, பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மணிப்பூரில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற எம்.பி பிமோல் அகோய் பேசியது தற்போது வைரலாகியுள்ளது.

அதில் அவர் “மணிப்பூரில் சுமார் 60 ஆயிரம் மக்கள் இன்னமும் முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். மணிப்பூர் மக்களின் கோபமும், அவஸ்தைகளும் சேர்ந்து சாதாரண மனிதனான என்னை ஒரு அமைச்சரை வீழ்த்த வைத்து இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது. ஆனால் நமது பிரதமர் மணிப்பூர் விஷயத்தில் மவுனம் காக்கிறார். ஜனாதிபதி உரையில் கூட மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தைக் கூட இல்லை. இந்த அமைதி சாதாரணமானது அல்ல.


மவுனம்தான் மணிப்பூர் மக்களிடம் நீங்கள் பேசும் மொழியா? உங்கள் நெஞ்சில் கை வைத்து கலவரத்தால் பாதிக்கப்பட்டு வீடற்று நிற்பவர்களை, ஏழை தாய்மார்களை, விதவைகளை பற்றி யோசித்து பாருங்கள். பிரதமர் மணிப்பூரை பற்றி பேசத் தொடங்கினால் நான் அமைதி ஆகிவிடுகிறேன்” என்று கூறியுள்ளார்.

மணிப்பூர் எம்.பியான பிமோல் அகோய் ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தவர். மணிப்பூரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தனக்கு எதிராக போட்டியிட்ட பாஜக மத்திய அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சனை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K