1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 21 ஜூன் 2022 (13:03 IST)

அக்னி வீரர்களுக்கு நாங்கள் பணி தருவோம்! – டாடா குழுமம் அறிவிப்பு!

Agneepath
அக்னி திட்டத்தில் குறுகிய கால ராணுவ பணி முடிக்கும் வீரர்களுக்கு டாடா குழுமம் பணி வாய்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.

மத்திய அரசு ராணுவத்தில் 4 ஆண்டுகள் குறுகிய கால பணி அளிக்கும் அக்னிபாத் ராணுவப்பணி திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல பகுதிகளில் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பல இடங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. இது தொடர்பாக போராட்டம் நடத்திய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அக்னி ராணுவ பணி திட்டத்திற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்து வருவதுடன், பணி முடிந்து திரும்பும் வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து தெரிவித்துள்ள டாடா குழும தலைவர் சந்திரசேகரன் “இந்த திட்டம் ராணுவத்தில் இணையும் இளைஞர்களுக்கு தேசத்தை பாதுகாப்பதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக மட்டுமல்லாமல், மிகவும் ஒழுக்கமான பயிற்சி பெற்ற வீரர்களை தொழில்துறைகள் அடையாளம் காணவும் உதவும்.

அக்னி வீரர்களின் செயல்திறனை அங்கீகரிப்பதோடு அவர்களுக்கு தொழில்துறையில் சிறந்த வாய்ப்புகளை வழங்க டாடா குழுமம் தயாராக உள்ளது” என கூறியுள்ளார். முன்னதாக அக்னி வீரர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க தயார் என மஹிந்திரா நிறுவனமும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.