வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (14:21 IST)

ப.சிதம்பரத்தை கை விட்டதா காங்கிரஸ்??: போராட வராத காங். தலைவர்கள்

நேற்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை எதிர்த்து இன்று காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் யாரும் வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐஎன்எக்ஸ் அன்னிய முதலீடு பெற அனுமதி வழங்கியது குறித்த ஊழல் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தான் கைதாவோம் என உணர்ந்த ப.சிதம்பரம் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு அளித்தார். அவர் மனுவை அவசர வழக்காக எடுத்து உடனே விசாரிக்க வேண்டும் என கோரினார்கள். ஆனால் அந்த மனுவின் மீதான விசாரணை இன்று ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு ப.சிதம்பரம் டெல்லியில் கைது செய்யப்பட்டார். இந்த திடீர் சம்பவம் காங்கிரஸாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சிதம்பரத்தின் கைது நடவடிக்கையை எதிர்த்து தமிழக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்திய தொண்டர்கள் பல இடங்களில் போலீஸால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் போராட்ட களத்திற்கு தமிழக காங்கிரஸ் முக்கிய உறுப்பினர்கள் யாரும் வரவே இல்லை. இது காங்கிரஸ் தொண்டர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் பிரமுகர்களான தங்கபாலு, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், விஜயதரணி உள்ளிட்ட எவரையும் போராட்டம் நடந்த இடங்களில் பார்க்க முடியவில்லை. இதனால் தமிழக காங்கிரஸ் ப.சிதம்பரத்தை கைவிட்டு விட்டதோ என்ற சந்தேகம் தொண்டர்களுக்கு எழுந்துள்ளது.

சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய ஆட்களோடு தொடர்பில் இருந்தாலும், தமிழக காங்கிரஸில் யாரையும் அவர் ஆதரிக்கவில்லை. அதனால்தான் அவருக்காக போராட தமிழகத்தில் யாரும் வரவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். அதேசமயம் சிதம்பரம் மீதான் ஊழல் வழக்கு குறித்த விவாதங்கள் எழுந்ததில் இருந்தே ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.