வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (08:50 IST)

தமிழ்நாடு இரண்டாக பிரிக்கப்படுமா? ப.சிதம்பரம் கேள்விக்கு அதிமுக எம்பி பதில்!

காஷ்மீரின் 70வது சிறப்புப் பிரிவை ரத்து செய்ததையும், அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் முடிவையும் எடுத்த மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 370ஆவது பிரிவை ரத்து செய்வது மற்றும் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவதை கூட காங்கிரஸ் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் இதனை செய்யும் முறை தவறு என்றும், மத்திய அரசு தனது மெஜாரிட்டியை பயன்படுத்தி அராஜகமாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதேபோன்று பிற்காலத்தில் மற்ற மாநிலங்களை இணைக்கும் நடவடிக்கையை எடுக்க முடியும் என்றும் காங்கிரஸ் தரப்பினர் கூறினார் 
 
இதுகுறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் கூறியபோது 'மத்திய அரசு எதிர்காலத்தில் வடக்கு வங்காளத்தை யூனியன் பிரதேசமாக தனி மாநிலமாக மாற்றினால் எப்படி தடுக்க முடியும்? என்றும் தமிழ்நாட்டை எதிர்காலத்தில் மத்திய அரசு பிடித்தால் எப்படி தடுக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பினார். அதிமுகவைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசின் நடவடிக்கையை உணரவில்லை என்றும், இதே முடிவை தமிழ்நாடு உட்பட எந்த ஒரு மாநிலத்திலும் நடைமுறைப்படுத்த முடியும் என்றும், ஆதலால் இது மிகப்பெரிய தவறு என்றும், இந்த தவறான முடிவை எதிர்கால சந்ததியினர் உணர்வார்கள் என்றும் தெரிவித்தார் 
 
ப சிதம்பரம் அவர்களின் இந்த கருத்துக்கு பதில் அளித்த அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் 'தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பார்கள் என்று சொல்லப்படுவது வெறும் அரசியல் காரணங்களால் தான் என்றும், அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என்றும் பதிலளித்தார். மேலும் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் மற்ற எந்த மாநிலத்திலும் காஷ்மீர் போன்ற பிரச்சினை இல்லை என்பதால் காஷ்மீரில் எடுத்த முடிவை மற்ற மாநிலத்தில் எடுப்பார்கள் என்பது எதிர்க்கட்சியினர்களின் யூகமே என்று பாஜகவினர் விளக்கம் அளித்து வருகின்றனர்