1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 8 டிசம்பர் 2020 (08:03 IST)

பாரத் பந்த்: தமிழகம், புதுச்சேரியிலும் கடைகள் அடைப்பு!

டெல்லியில் போராடும் விவசாயிகளின் அழைப்பை ஏற்று இன்று பாரத் பந்த் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 
 
சமீபத்தில் மத்திய அரசு அமல்படுத்திய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் ஹரியானா ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் டெல்லியில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் இந்தியா மட்டுமின்றி உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இந்த போராட்டத்தை நிறுத்த அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு நடத்தி வந்தாலும், அந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் தான் முடிந்துள்ளன. இதனிடையே இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக விவசாயிகள் பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்தனர். 
 
இந்த அழைப்பை ஏற்று இன்று பாரத் பந்த் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, விவசாயிகள் டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக புதுச்சேரி மாநிலத்தில் முழு அடைப்பு நடந்து வருகிறது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடவில்லை.  டீக்கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில் போலீசார் தீவர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 
 
மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் போராட்டம் நடைபெறுகிறது. திருவாரூர் திருத்துறைப்பூண்டியில் சுமார் 2 ஆயிரம் கடைகளை மூடி விவசாயிகளுக்கு வியாபாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.