1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (15:59 IST)

'இந்தியா' கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருமாவளவன்

வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள  நிலையில், இதற்காக அனைத்து  தேசிய மற்றும் மாநில கட்சிகளும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அதன்படி, காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ், விசிக, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி   உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ளன.

இக்கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. 2 வது கூட்டம் பெங்களூரில் நடைபெற்றபோது, இக்கூட்டணிக்கு ‘இந்தியா’ என்ற பெயரிடப்பட்டது. 3 வது ஆலோசனைக் கூட்டம் மும்பையில்   நேற்று முதல்  நடைபெற்று வருகிறது.

அதன்படி, இக்கூட்டணியில் 16 கட்சிகள் இணைந்திருந்த நிலையில்,  நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தின்போது மொத்தம் 28 கட்சிகளைச் சேர்ந்த  63 பிரதிநிதிகள் பங்கேற்றதாகத் தகவல் வெளியானது.

இக்கூட்டத்தில்  விசிக சார்பில்  பங்கேற்றுள்ள அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தன் சமூகவலைதள பக்கத்தில்,

‘’மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 

1. இந்தியா கூட்டணி கட்சிகளாகிய நாங்கள், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இயன்றவரை ஒன்றாகப் போட்டியிடுவதற்கு இதன்மூலம் தீர்மானித்துள்ளோம். வெவ்வேறு மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு ஏற்பாடுகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு, கொடுக்கல் வாங்கல் ஒத்துழைப்போடு கூடிய விரைவில் முடிக்கப்படும்.

2. இந்தியா கூட்டணி கட்சிகளாகிய நாங்கள், பொதுமக்களின் அக்கறை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூடிய விரைவில் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்ய முடிவு செய்கிறோம்.

3. இந்தியா கூட்டணி கட்சிகளாகிய நாங்கள், பல்வேறு மொழிகளில் ஒன்றுபடும் பாரதம், வெற்றிபெறும் இந்தியா  என்ற கருப்பொருளுடன் தொடர்புடைய தகவல் தொடர்பு மற்றும் ஊடக உத்திகள் மற்றும் பிரச்சாரங்களை ஒருங்கிணைப்பதெனத் தீர்மானிக்கிறோம்’’என்று தெரிவித்துள்ளார்.