வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (20:17 IST)

அதிகரித்த கள்ள நோட்டு, வங்கி மோசடிகள் – ரிசர்வ் வங்கியின் அதிர்ச்சி அறிக்கை

கடந்த ஆண்டை விட அதிகமாக வங்கி மோசடிகளும், கள்ள நோட்டு புழக்கமும் இந்த ஆண்டு அதிகரித்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

2018 – 2019 ம் நிதி ஆண்டின் அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதில் பணப்பரிவர்த்தனைகள், கள்ள நோட்டு புழக்கம், வங்கி மோசடிகள் ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் கடந்த ஆண்டைவிட வங்கி மோசடிகள் 74 சதவீதம் இந்த ஆண்டில் அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

முந்தைய நிதியாண்டை விட இந்த ஆண்டு வங்கிகளில் அதிகமான மோசடிகள் நடைபெற்றுள்ளதாகவும், அவற்றை கண்டுபிடித்து சரிசெய்ய வங்கிகள் பல மாத காலங்கள் எடுத்து கொண்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இன்னும் பல மோசடி சம்பவங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் முந்தைய ஆண்டைவிட இந்த நிதி ஆண்டில் கள்ள நோட்டு புழக்கம் மிகவும் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. 2017-2018ம் ஆண்டில் புதிய 500 ரூபாய் கள்ள நோட்டுகள் சுமார் 9 ஆயிரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2018 – 19ல் இதன் எண்ணிக்கை 21 ஆயிரமாக உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கண்டுபிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான 100 ரூபாய் நோட்டுகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ள நோட்டு புழக்கம் ஒரே ஆண்டில் இவ்வளவு அதிகரித்திருப்பது இதுவே முதல்முறை என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். இது தொடரும் பட்சத்தில் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.