வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 22 நவம்பர் 2016 (15:21 IST)

வீடு, கார், கல்வி கடன் தவணை செலுத்த 2 மாதம் அவகாசம் -ரூபாய் நோட்டு பிரச்சனை எதிரொலி

பழைய நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதாலும், புதிய ரூபாய் நோட்டுகள் பெற தட்டுப்பாடு நிகழுவதாலும், வங்கிகளுக்கு செலுத்தப்பட வேண்டிய மாத கடன் தவணைகளை செலுத்த ரிசர்வ் வங்கி அவகாசம் அளித்துள்ளது.


 

 
கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அதற்கு பதில் புதிய நோட்டுகளை வங்கிகளுக்கு சென்று மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தார்.  
 
இந்த அறிவிப்பு, ஏழை மற்றும் நடுத்தர மக்களை அதிகம் பாதித்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கவும், பழைய நோட்டுகளை மாற்றவும் பொதுமக்கள் வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்களில் காத்துக் கிடக்கின்றனர். 
 
ஆனால், பெரும்பாலான ஏ.டி.எம்-களில் பணம் இல்லை. அப்படியே ஒரு சில ஏ.டி.எம் மையங்களில் பணம் இருந்தாலும், அங்கு மக்கள் கூட்டம் வரிசை கட்டி நிற்பதால், பணம் எடுப்பது பெரும்பாடாக இருக்கிறது. எனவே தங்களின் அன்றாட செலவுகளுக்கும், அத்தியாவசிய தேவைகளுக்கும் பணம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், வீடு, கார், தனிநபர் கடன், கார் போன்ற தேவைகளுக்கு, வங்கியில் கடன் வாங்கி மாதத் தவணைகளாக கட்டி வருபவர்கள், பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். குறிப்பிட்ட தேதிக்குள், தவணைத் தொகையை செலுத்தவில்லை எனில், வங்கிகள் அபராதம் விதிக்கும். 
 
இதைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கிகள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்களில் ரூ.1 கோடி வரை வீட்டுக்கடன், கார் கடன், வீட்டுக் கடன், விவசாயக் கடன், கல்விக் கடன், தொழில் கடன், தனி நபர் கடன் போன்றவற்றை செலுத்து 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
 
அதாவது நவம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை செலுத்த வேண்டிய தவணை தொகைக்கு இந்த கால அவகாசம் பொருந்தும். இதை அனைத்து வங்கிகளும் பின்பற்ற வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.