1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 25 ஏப்ரல் 2024 (09:30 IST)

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வ் வங்கி விதித்த தடை வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கோடக் மஹிந்திரா வங்கிக்கு ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

கோட்டக் மஹிந்திரா வங்கியின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பில் சில குறைபாடுகள் உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் அந்த வங்கியின் நடைமுறையில் உள்ள ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களுக்கு புறம்பானதாக அமைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதனால்  வாடிக்கையாளர்கள், வங்கியின் இணைய சேவைகளை பயன்படுத்தும்போது சில சிக்கல்களை எதிர்கொள்வதாக புகார் வந்தது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி இதுகுறித்து அறிவுறுத்தியும் கோடக் மஹிந்திரா வங்கி இதுதொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணத்தால், ஆன்லைன் வாயிலாக, புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பது, புதிய கிரெடிட் கார்டுகள் வழங்குவது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில்  ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு, வங்கி தொடர்ந்து அதன் சேவைகளை வழங்கலாம் என்று அறிவித்துள்ளது.

Edited by Siva