திங்கள், 16 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 9 அக்டோபர் 2020 (18:00 IST)

வயலோடு பூசாரியையும் சேர்த்து கொளுத்திய கும்பல்! – ராஜஸ்தானில் பரபரப்பு!

வயலோடு பூசாரியையும் சேர்த்து கொளுத்திய கும்பல்! – ராஜஸ்தானில் பரபரப்பு!
ராஜஸ்தானில் கோவில் நிலம் தொடர்பான பிரச்சினையில் பூசாரியை எதிர் தரப்பினர் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் கோவில்களை நிர்வகிக்கும் பூசாரிகள் வாழ்வாதாரத்திற்காக கோவில் நிலத்தை பயன்படுத்திக் கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் கரோலி மாவட்டத்தில் உள்ள ராதா கிருஷ்ணன் கோவிலில் பூசாரியாக இருப்பவர் பாபு லால் வைஷ்னவ். இவர் அந்த கோவிலுக்கு உட்பட்ட நிலத்தின் ஒரு பகுதியில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளார்.

இதற்காக அங்கிருந்த தினை பயிர்களை அறுவடை செய்து நிலத்தை சுத்தப்படுத்தியபோது வேறு ஒரு சமூகத்தை சேர்ந்த சிலர் அது தங்கள் நிலம் என பிரச்சினை செய்துள்ளனர். இந்த விவகாரம் பஞ்சாயத்து வரை செல்ல அங்கு பூசாரிக்கு ஆதரவாகவே பேசப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த குறிப்பிட்ட சமூகத்தினர் அறுவடை செய்திருந்த தினை பயிர்களை கொளுத்தியுள்ளனர். அதை தடுக்க வந்த பூசாரி மீதும் பெட்ரோலை ஊற்றி கொளுத்தியுள்ளனர். தீக்காயமடைந்த பூசாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஒருவரை கைது செய்துள்ளதுடன் தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.