1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 ஜனவரி 2022 (12:49 IST)

ட்விட்டர் மத்திய அரசுடன் சேர்ந்து என்னை முடக்குகிறது! – ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

ட்விட்டர் நிறுவனம் மத்திய அரசுடன் சேர்ந்து தனது கணக்கை முடக்குவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு சில நாட்கள் முடக்கப்பட்டது. அதை தொடர்ந்து தனது ட்விட்டர் கணக்கில் தன்னை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ள ராகுல்காந்தி “ட்விட்டரில் என்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மாதத்திற்கு 2 லட்சம் என இருந்தது. ஆனால் கடந்த 2021 ஆகஸ்ட் முதல் வெறும் 2,500 என்ற எண்ணிக்கையில் குறைந்துள்ளது. வேளாண் சட்டம் குறித்து நான் பதிவிட்ட வீடியோ ஒன்று அதிக பார்வைகளை பெற்றிருந்தபோதும் நீக்கப்பட்டது. ட்விட்டர் இந்தியாவில் வேலை செய்யும் என் நண்பர்கள் மத்திய அரசு கொடுக்கும் அழுத்தம் தான் இதற்கு காரணம் என கூறுகின்றனர். இது குறித்து நீங்கள் பதிலளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ட்விட்டர் நிறுவனம் ”ட்விட்டர் தளத்தில், பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை விவரங்களை அனைவரும் கண்கூடாக பார்க்கும் அம்சம் உள்ளது. ஒருபோதும் ட்விட்டர் தளம் தன்னிச்சையாக செயல்படாது” என்று தெரிவித்துள்ளது.