1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 20 மே 2020 (11:19 IST)

பாஜக பேனரை வைத்துக் கொள்ளுங்கள்; பேருந்தை அனுமதியுங்கள்! – பிரியங்கா காந்தி ட்வீட்!

வெளிமாநில தொழிலாளர்கள் பயணிக்க காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகளை மாநிலத்திற்குள் அனுமதிக்காமல் உத்தர பிரதேச அரசு தடுப்பதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் பல வெளிமாநில தொழிலாளிகள் கால்நடையாக தங்கள் குடும்பத்தினரோடு சொந்த மாநிலங்களுக்கு பயணித்து வருகின்றனர். இதில் பலர் செல்லும் வழியிலேயே உயிரிழக்கும் சோகமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளிமாநில தொழிலாளிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல 1000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு உத்தர பிரதேச அரசு அனுமதி வழங்க வேண்டும் எனவும் காங்கிரஸ் முக்கிய தலைவர் பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு உத்தர பிரதேச அரசு அனுமதியளித்து பேருந்து எண்கள் பட்டியலை கேட்டிருந்தது. ஆனால் பேருந்து பதிவு எண்களுக்கு பதிலாக ஆட்டோ, கார், மினிவேன் போன்றவற்றின் எண்ணை கொடுத்திருப்பதாக காங்கிரஸை சேர்ந்த பிரியங்கா காந்தியின் தனிப்பட்ட செயலாளர் சந்திப் சிங் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரியங்கா காந்தி பேருந்துகளை மாநிலத்துக்குள் கொண்டு வர விடாமல் உத்தர பிரதேச அரசு தடை செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் “பேருந்துகளில் பாஜக பேனர்களை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் எங்கள் சேவைகளை தடுக்காதீர்கள். இதனால் ஏற்கனவே 3 நாட்கள் விரயமாகிவிட்டன. மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்” என பதிவிட்டுள்ளார்.