1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 16 டிசம்பர் 2019 (17:47 IST)

அரசியலமைப்புக்கு கட்டுப்படுவோம்; ஆர்.எஸ்.எஸ்க்கு அல்ல! – கேரள முதல்வர்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் கேரள முதல்வர் தனது நோக்கம் குறித்து பேசியுள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கேரளாவில் ஆளும் சிபிஎம் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இருவரும் இணைந்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் ”சிறுபான்மையினருக்கு குடியுரிமை தரக்கூடாது என யார் சொன்னாலும் கவலையில்லை. அதை கேரளாவில் ஏற்க மாட்டோம்.

மாநில அரசுகள் இந்த விவகாரங்களில் தலையிட முடியுமா என நீங்கள் கேட்கலாம். மத்திய அரசு, மாநில அரசு குடியுரிமை சட்டங்கள் ஆகிய அனைத்தும் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அமைந்தவையே.

எந்த அரசியல் சாசனத்தில் சத்தியம் செய்து பதவி பிரமாணம் செய்தோமோ அந்த அரசியல் சாசனத்தை யார் நாசம் செய்ய நினைத்தாலும் நாங்கள் அதை எதிர்ப்போம்.

கேரள அரசு அரசியலமைப்புக்கு மட்டுமே கட்டுப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் உள்நோக்கம் கொண்ட திட்டங்களுக்கு அல்ல” என தெரிவித்துள்ளார்.