வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (15:23 IST)

பணியாளர்கள் இல்லாமல் விமானத்தை இயக்குவதா.? ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.98 லட்சம் அபராதம்.!

Flight
போதிய பணியாளர்கள் இல்லாமல் விமானங்களை இயக்கியதாக எழுந்து புகாரில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் ரூ.98 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 
 
ஏர் இந்தியா நிறுவனம் சமீபகாலமாக பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு லண்டனில் ஓட்டல் அறையில் ஏர் இந்தியாவில் பணியாற்றும் பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அதேபோல், நேற்று மும்பையில் இருந்து 135 பயணிகளுடன் திருவனந்தபுரம் வந்த ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், பதறி போன, அதிகாரிகள் திருவனந்தபுரத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கி பயணிகளை வெளியேற்றினர்.  பின்னர் விமானத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
 
இந்நிலையில், இன்று  ஏர் இந்தியா லிமிடெட் நிறுவனம் போதுமான பணியாளர்கள் இல்லாமல் விமானங்களை இயக்கியதற்காகவும், தகுதியற்ற விமானி மூலம் விமானத்தை இயக்கியதற்காகவும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ.98 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ஜூலை 10-ம் தேதி ஏர் இந்தியா சமர்ப்பித்த தன்னார்வ அறிக்கையின் மூலம் இந்த சம்பவம் டிஜிசிஏவின் கவனத்திற்கு வந்ததாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, டிஜிசிஏ விசாரணையை மேற்கொண்டு ஒழுங்குமுறை விதிகளில் குறைபாடுகள் மற்றும் பல மீறல்கள் இருப்பதைக் கண்டறிந்தது. இதனால், ஏர் இந்தியாவின் இயக்குநருக்கு ரூ.6 லட்சமும், பயிற்சி இயக்குநருக்கு ரூ.3 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
 
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தினமும் பிரச்னைகள் வரிசை கட்டிதான் இருக்கும் என சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.