செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 5 ஜூன் 2023 (17:49 IST)

''நீதிக்கான போராட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை'' - சாக்ஷி மாலிக் விளக்கம்

delhi protest players
டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் இருந்து சாக்ஷி மாலிக் விலகியதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்திய  மல்யுத்த சம்மேளனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் பிரிஜ்பூஷண் சரண்சிங். இவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முதல்  டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

இந்த  நிலையில் சமீபத்தில்  மல்யுத்த வீரர்கள் புதிய பாராளுமன்றத்தை நோக்கி செல்ல தொடங்கியதால் போலீஸாரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.  இதில், பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போட்டிருந்த கொட்டகைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன.

இதையடுத்து, தேசத்திற்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர்

இந்த விவகாரத்தில் மல்யுத்த வீரர்களின் குறைகளை அரசு  நிவர்த்தி செய்ய வேண்டும். இல்லையென்றால் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக  வரும் ஜூன் 9 ஆம் தேதி  நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று வடமாநில விவசாயிகள் சங்க தலைவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் இருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் தெரிவித்ததாகவும்,  கிழக்கு ரயில்வே பணியில் சேரவுள்ளதாகவும் என  வெளியான  தகவலுக்கு  சாக்ஷி மாலிக் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,

''போராட்டத்தைக் கைவிட்டதாக வெளியான தகவல் தவறானது. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். நாங்கள் நீதிக்கான போராட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை. பின்வாங்கவும் மாட்டோம்'' என்று தெரிவித்துள்ளார்.

எனவே, மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரி  வீரர்கள், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.