ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2019 (08:00 IST)

ஒருத்தருக்கும் இடமில்லை, நாட்டை விட்டு வெளியேறுங்கள்: அமித்ஷா ஆவேசம்

இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் யாரும் இனி நாட்டில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காண சமீபத்தில் அசாம் மாநிலத்தில் தேசிய மக்கள் பதிவேடு என்று கூறப்படும் என்.ஆர்.சியின் இறுதிப் பட்டியல் எடுக்கப்பட்டது. இந்த பட்டியலில் மொத்தம் 3,30,27,661 பேர் குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், ஆனால் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் வெறும் 3,11,21,004 நபர்களின் பெயர்கள்தான் இடம்பெற்று இருந்ததாக தெரிய வந்தது. இதனையடுத்து குடியுரிமை பெறாத 19,06,657 பேரின் பெயர்கள் இந்த இறுதிப் பட்டியலில் இணைக்கப்படவில்லை. இதனால் குடியுரிமை பெறாதவரகள் நிலை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து குடியுரிமை பெறாத மக்கள் கலக்கத்துடனும், அச்சத்துடனும் நாட்களை கடத்தி வருகின்றனர்.
 
 
இந்த நிலையில் அசாம் தலைநகர் கவுகாத்தியில் 8 வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:
 
 
தேசிய குடிமக்கள் பதிவேட்டு குறித்து பல்வேறு வகையான மக்கள் அனைத்து வகையான கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். அவர்களுக்கு நான் சொல்ல விரும்பு ஒரே விளக்கம் என்னவெனில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுப் பணிகள் உரிய கால வரையறையில் முடிக்கப்பட்டுவிட்டது. இனி சட்ட விரோதமாக குடியேறிய ஒரு நபர் கூட இந்தியாவில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். அதுதான் எங்கள் திட்டம். இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறிய ஒருவர் கூட இருக்க முடியாது. எல்லோரையும் நாட்டைவிட்டு வெளியே அனுப்ப தயார் ஆகிவிட்டோம். அதற்காக தீவிரமாக உழைத்து வருகிறோம். தேசிய குடிமக்கள் பதிவேடு, நேரத்தை கணக்கில் கொண்டு வேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இதன் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்”என்று கூறினர். அமித்ஷாவின் இந்த பேச்சால் 19,06,657 மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர்.