1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 11 டிசம்பர் 2018 (11:25 IST)

அடிமேல் அடி வாங்கும் மோடி

பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் ஒருவராக இருந்து பொருளாதார வல்லுனரும், எழுத்தாளருமான சுர்ஜித் பல்லா ராஜினாமா செய்வதாக, இன்று திடீரென அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல்  முடிவுகள் அனைத்தும் பாஜக வுக்கு எதிராக வந்து கொண்டிருக்கின்றன. பாஜக ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பாஜக அங்கேயும் தனது செல்வாக்கை இழந்துள்ளது. இதனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வீசியதாக கூறப்பட்ட மோடி அலை ஓய்ந்து விட்டதாக அரசியல் வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதனால் மோடிக்குப் பயங்கரமான அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது மேலும் ஒரு பிரச்சனை அவருக்கு உருவாகியுள்ளது. இம்முறை அவருக்கு வந்துள்ள பிரச்சனை அவரின் தலைமையில் இயங்கிய நிதி ஆயோக்  அமைப்பில் இருந்து வந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான நிதிஆயோக் அமைப்பில் விவேக் தேப்ராய், பொருளாதார நிபுணர்கள் ரத்தின் ராய், ஆஷிமா கோயல், ஷமிகா ரவி, சுர்ஜித் பல்லா உள்ளிட்டோர் ஆலோசகர்களாக இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் தற்போது தனது டிவிட்டரில் தனது ராஜினாமாவைப் பகிர்ந்துள்ளார் சுர்ஜித் பல்லா. அதில் ‘பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் பகுதிநேர உறுப்பினர் பதவியில் இருந்து நான் டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டேன்’ என அறிவித்துள்ளார். ராஜினாமாவிற்கானக் காரணமாக அவர் எதையும் இதுவரைத் தெரிவிக்கவில்லை.

ரிசர்வ வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து முக்கியமானப் பதவியில் உள்ளவர்கள் ராஜினாமா செய்வது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.