வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 1 ஜூலை 2019 (07:43 IST)

இந்திய அணியின் தோல்விக்கு காரணம் ஜெர்ஸிதான்: முன்னாள் முதல்வர் கருத்து

நேற்று நடைபெற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தியா இந்த போட்டியில் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான், இலங்கை ஆகிய இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது. 
 
 
இந்தியா இந்த போட்டியில் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் வென்றிருக்க முடியும். தோனி மாதிரி ஒரு ஹிட்டர் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடியிருந்தால் வெற்றிக்கனியை பறித்திருக்கலாம் என்றும், ஆனால் தோனியும், கேதார் ஜாதவ்வும் வெற்றிக்கான முயற்சியில்கூட கொஞ்சம் கூட ஈடுபடவில்லை என்றும், கிரிக்கெட் விமர்சகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் பல நெட்டிசன்கள் இந்தியாவின் தோல்விக்கு காவி நிற ஜெர்ஸிதான் காரணம் என மொட்டைத்தலைக்கும் முழங்காலிற்கும் முடிச்சு போட்டு வருகின்றனர்.
 
 
வேலை வெட்டி இல்லாத நெட்டிசன்கள் தான் இவ்விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்றால் ஒரு மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். இந்திய அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முஃப்தி தனது டுவிட்டரில் 'இந்திய அணி உலகக் கோப்பையில் தோற்றதற்கு புதிய காவி நிற ஜெர்ஸியே காரணம் என்று தெரிவித்துள்ளார். மெகபூபா முஃப்தியின் இந்த கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காவி நிறம் அல்லாத பல நிறங்களை அணிந்து தேர்தல் பிரச்சாரம் செய்த நீங்கள், ஏன் ஜம்மு காஷ்மீரில் நடந்த மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை' என்று நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


சென்னை மக்கள் ஜெர்ஸி நிறம் குறித்து வாதாடுவதை விட்டுவிட்டு தண்ணீர் பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும் என்று நேற்று கூறிய மெகபூபா முஃப்தி இன்று இந்திய அணியின் தோல்விக்கு ஜெர்ஸிதான் காரணம் என்று கூறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது